Skip to main content

கோடநாடு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

Kodanadu case adjourned court order

 

மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று (27/08/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 

 

அதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 2- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கீழமை நீதிமன்ற வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உள்ள வழக்கின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார். 

 

இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு காவல்துறை சாட்சியாக உள்ளவரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவருமான ரவி என்பவர் வழக்கு விசாரணைக்கு தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதேபோல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் வழக்கு விசாரணை விரிவுபடுத்த வேண்டும் என்று நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாக அரசு தரப்பு தனது வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த நிலையில் அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், இன்று (27/08/2021) வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று (27/08/2021) உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக, உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கொடநாடு வழக்கு; மனோஜ் சாமிக்கு சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி.

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
case of Kodanadu CbCID sent summons to Manoj Sami

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியாக சேர்க்கப்ட்டடுள்ள சயான் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) மதியம் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விசாரணையின் போது அவர் 35 பக்கங்களுக்கு வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் பூசாரியாக உள்ள மனோஜ் சாமி 9 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சயான் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக மனோஜ் சாமிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அளித்துள்ளனர். அதில் வரும் 15 ஆம் தேதி (15.02.2024) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வகக் குழு தமிழகம் வருகை தந்திருந்தனர். அதன்படி இந்த குழுவினர் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் இந்த வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.