Skip to main content

கடத்தல் வழக்கில் கோடம்பாக்கம் ஶ்ரீ கைது!

Published on 13/07/2021 | Edited on 14/07/2021
g

தொழிலதிபரை கடத்தி சொத்தை அபகரித்த வழக்கில் இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

 

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த 2019 ஆம் ஆண்டு கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், கோடம்பாக்கம் ஸ்ரீ, தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் உட்பட 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் காவல்துறை அதிகாரிக்கு சம்பந்தம் இருப்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீஸ் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 10 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். கோடம்பாக்கம் ஸ்ரீ மட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் சீனிவாசராவ் தான் கொடுத்த கடனுக்காக தொழிலதிபர் ராஜேஷுக்கு ரவுடிகள் மூலமாகவும், காவல்துறை அதிகாரிகள் மூலமாகவும் பிரச்சனை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

குறிப்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழக டிஜிபி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியதன் அடிப்படையில், திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, ஷங்கர் மற்றும் அனைத்து இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, சீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பொய்யான ஆவணத்தை தயாரித்தல், ஏமாற்றுவதற்காக போலி ஆவணத்தை தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி என 5 பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பத்து பேரையும் கைது செய்யும் பணியில் சிபிசிஐடி போலீஸார் மும்முரமாக செயல்பட்டனர். 

 

இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அனைத்திந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ யை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ யிடம் விசாரணை நடத்தி, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். கோடம்பாக்கம் ஸ்ரீக்கு வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மீதமுள்ள காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பேரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு வளாகத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது கோடம்பாக்கம் ஸ்ரீயின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கேமராவை உடைத்ததால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.