இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 88 ஆவது பிறந்த நாளான இன்று, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தினை மலர்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர் ஊர்மக்களும், அவரது குடும்பத்தாரும்.

Advertisment

அணு விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் இளைஞர்களின் கனவு நாயகன் என பன்முகத்தன்மைக் கொண்ட அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம் எனும் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்கு இன்று 88வது பிறந்த நாள். இதனைக் கொண்டாடும் விதமாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் பேக்கரும்பு நினைவிடத்தில் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்திருக்க, அவரது நினைவிடத்திற்கு வருகை தந்த அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்துமீரா மரைக்காயர் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் ராமேஸ்வரம் இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இதனையடுத்து அப்துல் கலாமின் நெருங்கிய நண்பர் விஜயராகவன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் என பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்திச் சென்றனர். இதே வேளையில், " மத்திய அரசு அறிவித்த அறிவுசார் மையத்தை நினைவிடம் அருகே அமைக்க வேண்டுமென", அப்துல் கலாமின் அண்ணன் மகள் நசீமா பேகம் ஊர் மக்கள் சார்பாக கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.