கரூரில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்த 3 மாணவிகள் கடந்த ஏப்ரல் முதல் நடந்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கான சிறப்பு தேர்வு நடைபெற்ற நிலையில், 3 மாணவிகளும் பசுபதி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வை எழுதி விட்டு வெளியில் வந்துள்ளனர். அதில் ஒரு மாணவியின் ஆண் நண்பர் அவர்களுக்கு ஒயின் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
அவற்றை குடித்த மாணவிகளில் ஒருவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட மற்ற 2 மாணவிகள் பசுபதிபாளையம் பகுதியில் பேருந்தில் ஏறி சர்ச் கார்னர் வந்துள்ளனர். அங்கு வாந்தி எடுத்தும், பாதி மயக்க நிலையில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவசர எண்ணான 100 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவிகளை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தினேஷ்(22) மூன்று மாணவிகளையும் மதிய உணவுக்காக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மூன்று மாணவிகளையும் ரெட் ஒயின் குடிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். அதன் பேரில் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் தினேஷ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.