Skip to main content

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்; எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

 karur police superintendent talks about north indian issue

 

கரூரில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளிவருவதால், வதந்திகளை வெளிமாநிலத் தொழிலாளர்கள் நம்பக் கூடாது என்பதற்காகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த காவல் கோட்டங்களுக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் அந்தந்த காவல்நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அச்சமின்றி பணியாற்றிட அவர்களுக்கு அறிவுறுத்தினர். இந்தப் பணிகளைப் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறுகையில், "அண்மையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வந்துள்ளதால், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த அச்ச உணர்வை அவர்களிடம் போக்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட இன்று அவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான உடனடி உதவிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள 9498100780, 04324296299 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

 

இதற்காக மாவட்ட காவல்துறையில் இந்தி மொழி தெரிந்த காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம், வாட்ஸாப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பினால், அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.