
ஆண்டுதோறும் டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்கு காவிரியில் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதும் அதன் பிறகு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்படுவதும் வழக்கம். கடந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 250 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்று கதவணையில் இருந்து தொடங்கும் கட்டளை மேட்டு வாய்க்கால் மூலமாக மாயனூர் முதல் குளித்தலை வழியாக திருச்சி மாவட்டம் வரை 63 கிலோமீட்டர் தூரம் பயணித்து சுமார் 25000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த கட்டளை மேட்டு வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்காக புனரமைப்பு பணி மேற்கொள்ள 335.5 கோடி ரூபாய் நிதி கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பணியை மேற்கொள்வதற்காக கட்டளை மேட்டு வாய்க்காலில் சம்பா அறுவடைக்கு பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டு புனரமைப்பு பணி நடைபெற்று வந்தது. பணி ஓராண்டுக்குள் முடிப்பதாக அப்போதைய அதிமுக அரசு விவசாயிகளிடம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஓராண்டுக்குள்ளாக பணிகள் முடிக்கப்படாமல் கடந்த 5 ஆண்டுகளாகவே பணி நீடித்து வந்தது.
இதன் காரணமாக தண்ணீர் தொடர்ந்து 5 ஆண்டுகளாகவே நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஏற்கனவே பயிரிட்டுள்ள வாழை, நெல், கரும்பு, வெற்றிலை ஆகிய பயிர்கள் காய்ந்து சேதமடைவதோடு, மேலும் நெல் சாகுபடியை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டும் தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள நெல், வாழை, கரும்பு, வெற்றிலை ஆகிய பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் திறந்து விட்டது போல இந்த இந்த வருடம் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி மற்றும் குளித்தலை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் திறக்க கோரி குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் இன்று கோரிக்கை மனுவை காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளர் வலையப்பட்டி வெங்கடாச்சலம் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அளித்தனர்.