Skip to main content

வழக்கில் சிக்கவைக்கத் துடிக்கும் காவல்துறை; குற்றம் சாட்டும் கொலை குற்றவாளி

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

karur district police against issue meet collector 

 

திருச்சி மாவட்டம் சர்க்கார்பாளையம் பனையக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு சரியான வேலை கிடைக்காததால், அப்போது தவறான நண்பர்களின் சேர்க்கையால் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இவர் பல்வேறு கொலைக்குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைவாசமும் அனுபவித்துள்ளார். பல்வேறு வழக்குகளும் இவர் மீது தற்போது வரை நிலுவையில் உள்ளன. இதில் காவல்துறையால் புனையப்பட்ட வழக்குகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் ஆர்த்திகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் சராசரி மனிதரைப் போல தானும் வாழ வேண்டும் என நினைத்து குற்றச்செயல்களை முற்றிலுமாக தவிர்த்து மனம் திருந்தி தற்போது வாழ்ந்து வருகிறார்.

 

இதனிடையே, தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார். அதில் சில வழக்குகளில் குற்றவாளி இல்லை என நிரூபணம் ஆகி நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளிலும் குறிப்பிட்ட நாட்களில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் காவல்துறையினர் ஜெகதீஷ் மீது பொய்யான வழக்கு ஒன்றை புனைந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான விசாரணையில் 7 மாதத்திற்கு பிறகு குண்டர் சட்டத்தில் வழக்கு போடுவதற்கு முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் இவரை விடுவித்தது. இந்த சூழலில் மீண்டும் ஜெகதீஷை கைது செய்து வழக்குகளில் சிக்க வைக்க வேண்டும் எனவும், ஜெகதீஷின் கை, கால்களை உடைக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் திட்டமிட்டு தன்மீது பொய்யான வழக்குகளை சித்தரிக்க முயல்வதாக கூறி, அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்க கரூர் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்திக்க அவரது தாயார் மற்றும் மனைவியுடன் வந்திருந்தார்.

 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் குற்றவாளியான ஜெகதீஷிடம் மனுவை பெறுவதற்கு தயக்கம் காட்டியதோடு மனுவை தனது உதவியாளரிடம் அளிக்கக் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளரிடம் ஜெகதீஷ் பேசுகையில், "கடந்த காலத்தில் நான் செய்த குற்றச்செயலுக்காக இன்று வரை குற்றவாளியாக உள்ளேன். இது தொடர்பாக ஏற்பட்டுள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். நான் இப்போது திருமணம் செய்து கொண்டதால் சராசரி மனிதனாக வாழ விரும்புகிறேன். ஆயினும் காவல்துறையினர் என் மீது ஏதேனும் புகார் கூறி என்னை வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதோடு எனது கை, கால்களை உடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

 

ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்ட போது என் கை, கால்களை மூன்று முறை உடைத்துள்ளனர். தற்போது நான் மனிதனாக வாழ நினைக்கும் நேரத்தில் காவல்துறையினர் வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து எனக்கு மன உளைச்சலை அளித்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தேன். நான் வசித்த பகுதி திருச்சி என்பதால், திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஆலோசனை கூறினார். திருச்சியில் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அங்கு நான் வசிப்பது சரியாக இருக்காது எனக் கருதி என் மனைவியுடன் நான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். அங்கும் காவல்துறையினர் தொடர்ந்து என்னை கண்காணித்து தொந்தரவு செய்து வருகின்றனர். சராசரி மனிதனாக திருந்தி வாழ நினைக்கும் எனக்கு அரசும், அரசு துறை அதிகாரிகளும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.