Skip to main content

காவல்நிலையத்தில் கைதி கொலை? தந்தை பரபரப்பு புகார்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

Kanyakumari police station case

 

குமரி மாவட்டம், பொன்மனை முல்லைசேரி விளையைச் சேர்ந்தவர் அஜித் (24). ஐ.டி.ஐ படித்துள்ள இவர், ஓட்டுநராக பணி செய்துவந்தார். குடி பழக்கத்துக்கு அடிமையான அஜித், அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவது வழக்கம். இதனால் அஜித் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் 3 அடிதடி வழக்குகள் உள்ளதாம்.

 

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒருவரிடம் தகராறு செய்து அவரை அடித்துள்ளார். இதனால் குலசேகரம் போலீசார், அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். 2 மாதம் சிறை வாசத்துக்கு பிறகு கடந்த 17-ம் தேதி பிணையில் வெளியே வந்த அஜித் குலசேகரம் காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையெழுத்து போட்டு வந்தார்.


கடந்த 23-ம் தேதி கையழுத்து போட சென்ற அஜித் விஷம் குடித்து இருப்பதாக அவரை காவல்துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் 25-ம் தேதி அஜித் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அஜித்தை அடித்து காயப்படுத்தி அதன் பிறகு வாயில் விஷம் ஊற்றி கொன்று விட்டனர் என கூறி அஜித்தின் உடலை வாங்க மறுத்தனர். 


இதையடுத்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட காவல்துறையினர் அஜித்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, அஜித்தின் தந்தை சசிகுமார், “என் மகனை குலசேகரம் போலீசார் அடிக்கடி மிரட்டி வந்தனர். அவன் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்தாலும் அவனை வழக்குகளில் ஈடுபடுத்தியே வந்தனர். இந்த நிலையில் தான் கையெழுத்து போட போன அவனை, போலீசார் அடித்ததில் இறந்து போனார்” என எஸ்.பி.ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் கொடுத்தார்.


சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தக்கலை டி.எஸ்.பி கணேசன், காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரின் உறவினர்கள் நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.