Skip to main content

நள்ளிரவில் பற்றியெரிந்த வீடு; தாத்தாவைக் காப்பாற்றப் போராடிய பேத்தி!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

An old man trapped in a burning roof house,Granddaughter who woke up

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது நாகல் குழி. இந்த ஊரைச் சேர்ந்தவர் 70 வயது பெரியான். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இவர் தனக்குத் துணையாக அவரது பத்து வயது பேத்தி நீரோஷாவுடன் வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு அவரது குடிசை வீட்டில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

நடு இரவு ஒரு மணி அளவில் அவர்களது கூரை வீடு திடீரென்று தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. தீயின் தாக்கத்தினால் திடுக்கிட்டு எழுந்த நிரோஷா தனது தாத்தாவை தீயிலிருந்து காப்பாற்றுவதற்காக எழுப்பியுள்ளார். உடல்நிலை சரியில்லாத பெரியான், வீட்டிற்கு வெளியே வர முடியாமல் தடுமாறி உள்ளார். உடனே நிரோஷா தாத்தாவை வீட்டை விட்டு வெளியே அழைத்து வருவதற்கு, உதவி செய்வதற்காக பக்கத்துத் தெருவில் குடியிருந்த தனது பெற்றோர் வீட்டுக்கு ஓடி அவர்களிடம் தகவல் கூறி அழைத்து வந்துள்ளார்.

 

அதற்குள் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எரிந்த வீட்டில் முதியோர் பெரியாரின் உடலை சடலமாகக் கண்டெடுத்தனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முதியவர் பெரியான் தீயில் சிக்கி இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் முதியவர் பெரியானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசாரின் விசாரணையில் மின்கசிவு காரணமாக அந்த வீடு இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது எனக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்த வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்த பெரியவர் ஒருவர், தீயில் சிக்கி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.