Skip to main content

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்; அதிகாரிகளுக்கு முதல்வர் முக்கிய அறிவுரை

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

kalaignar Women Rights Project Chief Minister's key advice to officials

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான 15.9.2023 அன்று தொடங்கப்படவுள்ளதையொட்டி அது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழா வருகிற 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், ஆயிரம் ரூபாயை மாதாமாதம், ஆண்டுதோறும் பெறப் போகிறார்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பும் கடமையும் அதிகாரிகளாகிய உங்களுக்கு இருக்கிறது.

 

ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம். அதேபோல்தான் சிறு தவறு நடந்துவிட்டால் அதனால்  கெட்டபெயரும் கிடைக்கும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனவே எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும், எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருவதை, தற்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன். தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.

 

ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏடி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், வரும் 15 ஆம் தேதி என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய இலவச தொலைப்பேசி எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்.

 

kalaignar Women Rights Project Chief Minister's key advice to officials

 

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன.  தகுதியானவர்கள் என தேர்ந்தெடுத்தது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள். சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம், மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.

 

வருகிற 15 ஆம் நாள் அன்று மாவட்டத் தலைநகரங்களில் இதற்கான விழா நடக்க இருக்கிறது. பணம் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். பணம் கிடைக்காத மகளிர் யாராவது அந்த இடத்துக்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தனியாக இதற்கென அலுவலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, நாங்கள் பரிசீலிக்கிறோம்' என்பதைச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். இது மிக மிக முக்கியமாகும். இதைச் செய்யாவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் பிரச்சனை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும். அதனால் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

kalaignar Women Rights Project Chief Minister's key advice to officials

 

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் க. இளம்பகவத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்