Advertisment

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கதாசிரியர் கலைஞானத்தின் 75 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும், அவரது 90-வது பிறந்தநாளையொட்டியும் தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் பாரதிராஜா தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவக்குமார், கதாசிரியர் கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, சிவகுமாரின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார்.

இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, கலைஞானத்துக்கு தனது சொந்த செலவில் வீடு வாங்கித் தருவதாக கூறினார். மேலும் கலைஞானத்துக்கு கதை சக்கரவர்த்தி கலைஞானம் என்ற பட்டத்தையும் ரஜினிகாந்த் அளித்தார்.

Advertisment

இந்நிலையில் தான் அறிவித்தபடி, சென்னை விருகம்பாக்கத்தில் 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட பல லட்சம் மதிப்பிலான வீட்டை கலைஞானம் குடும்பத்தாருக்கு வாங்கிக் கொடுத்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் நேற்று இந்த வீட்டின் கிரகபிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், நடிகர் சிவக்குமார், நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற எம்பி பொன். ராதாகிருஷ்ணனும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.