கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது நடைபெற்ற மோதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். ஐவர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் இரண்டு பேர் இறந்துவிட்டதாலும் மூன்று பேர் சிறார்கள் என்பதாலும் மீதமுள்ள 27 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.