Skip to main content

சவுக்கு சங்கர் வழக்கு; நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பு!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Judges give different judgments in the savukku  Shankar case

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை,  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு, நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வில், இன்று மீண்டும் விசாரணை வந்தபோது, சவுக்கு சங்கரின் தாய் தரப்பில், சவுக்கு சங்கர் கருத்தால் எந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. பொது சொத்துக்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள், குண்டர் சட்ட உத்தரவில் குறிப்பிடவில்லை என வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அனைத்து நடைமுறையும் பின்பற்றிதான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் தரப்பில் முறையிடப்பட்டது. இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் செல்வி ஜார்ஜ் ஆகியோர், பிளாக்மெயிலரான சவுக்கு சங்கரால் தாங்கள்  பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தொடர்ச்சியாக  பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் தண்டிக்கப்பட வேண்டிய நபர் எனத் தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இறுதி விசாரணை நடத்துவது தொடர்பாக, தங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், இந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இரு நிதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி சுவாமிநாதன் தீர்பளித்தார். அதேசமயம் இந்தத் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட மற்றொரு நீதிபதியான பாலாஜி குண்டர் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் மூன்றாவது நீதிபதி விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கர் தாய் கொடுத்த புகார் மனு குறித்து நான்கு மாதத்தில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனத் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை...’ - நீதிமன்றம் வேதனை

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
court anguish incident affects not only the women concerned

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாகா கமிட்டியில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற விசாரணையில் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மோகன கிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது, ‘பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும், மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் மீண்டும் விசாரித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். 

Next Story

‘3ஆம் பாலினத்தவர் உள் இடஒதுக்கீடு ரத்து’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Court action order on Cancellation of seat reservation for 3rd gender

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை ரக்‌ஷிதா ராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (02-06-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.