Skip to main content

தேர்வு அறையில் ஆசிரியரே விடைகளை எழுதிப் போட்ட அவலம்; விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

It is unfortunate that the teacher wrote the answers in the examination room; Notice asking for an explanation!
மாவட்ட ஆட்சியர் சாந்தி

 

தர்மபுரி அருகே, கணித தேர்வின்போது ஆசிரியரே வினாத்தாளில் இருந்து கேள்விகளுக்கான பதில்களை பலகையில் எழுதி போட்டு, காப்பி அடிக்க வைத்த அவலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கடந்த செப். 28ம் தேதி, ஆய்வுக்குச் சென்று இருந்தார். அப்போது மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அந்தப் பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்று கணித தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் வினாத்தாள் எளிமையாக இருந்ததா? தேர்வை எப்படி எழுதினீர்கள்? என்று ஆட்சியர் சாந்தி விசாரித்தார். 

 

அதற்கு மாணவர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல, நன்றாக எழுதினோம். எல்லோரும் தேர்ச்சி அடைந்து விடுவோம் என்று உற்சாகமாக கூறினர். இதையடுத்து அவர் வினாத்தாளை வாங்கிப் பார்த்தார். அதில் உள்ள சில வினாக்களுக்கான விடைகளை மாணவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் பதில் தெரியாமல் பேந்த பேந்த என்று விழித்தனர். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. 

 

எல்லோரும் உரத்த குரலில் நன்றாக தேர்வு எழுதினோம் என்று சொன்னீர்கள். ஆனால் ஒருவருக்கும் கேள்விக்கான பதில் தெரியவில்லையே ஏன்? என்று வியப்பாக ஆட்சியர் கேட்டார். அப்போது மாணவர்கள், எங்கள் கணித ஆசிரியர் கேள்விக்கான விடைகளை கரும்பலகையில் எழுதி போட்டார். அதைப் பார்த்து தேர்வு எழுதினோம் என்று ஒரே குரலில் கூறினர். 

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் சாந்தி, இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரனுக்கு உத்தரவிட்டார். கணித தேர்வன்று நடந்த சம்பவம் குறித்தும், மாணவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்தும் ஒரு வார காலத்திற்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி கணித ஆசிரியருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அளிக்கப்பட்டு உள்ளது. 

 

இந்த சம்பவம் தர்மபுரி மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.