Skip to main content

தொடரும் வருமான வரித்துறை சோதனை..!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

IT Raids at MKStalin's relative house


திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் அவரது நண்பர்கள் வீடு உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பல்வேறு தரப்புகளிலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

 

சமீபத்தில் மநீம பொருளாளரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் வருமானத்தில் காட்டாமல் 25 கோடி ரூபாய் வருவாயை மறைத்ததாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. அப்போது, ‘தன்னை 2 நாட்கள் முடக்கியதைத் தவிர வேறு எதையும் வருமான வரித்துறை செய்யவில்லை. இது அடிப்படை உரிமையில் கை வைக்கும் செயல்’ என எ.வ.வேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை செய்வது அரசியல் பழிவாங்கல் எனக் குற்றம்சாட்டியுள்ள திமுக, தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்தது. அதே நேரம் அமைச்சர் எம்.சி.சம்பத் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. இத்தகைய சோதனைகள் அனைத்தும் ஆளுங்கட்சியினர் இல்லங்களில் நடப்பதில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

 

இந்நிலையில், இன்று (02.04.2021) காலைமுதல் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நீலாங்கரை இல்லத்தில் சோதனை நடந்து வருகிறது. இவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் ஆவார். திமுகவிற்கு தேர்தலில் பல பணிகளைச் செய்து வரும் ஐபேக்கின் அலுவலகமும் இவரது இல்லத்தில்தான் இயங்கி வருகிறது. 

 

சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கும் அதே நேரத்தில், திமுக ஐடி பிரிவின் மாநிலத் துணைச் செயலாளரும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகனுமான கார்த்திக் மோகன் சம்பந்தப்பட்ட இடத்திலும், ஜி.ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் ஜி.ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் தேர்தல் பழிவாங்கும் நடவடிக்கைகள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் வேளையில், தேர்தலுக்கு இடையில் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ரெய்டு நடப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுவரை முதல்வர் அங்கு போவாதது ஏன்?' - தமிழிசை கேள்வி

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'Why hasn't the Chief Minister gone there yet?'-Tamizhisai question

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழக ஆளுநரை தமிழக பாஜகவின் நிர்வாகிகள் அனைவரும் இன்று சந்தித்தோம். சில கோரிக்கைகளை வைத்தோம். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த விஷச்சாராயத்தினால் மக்கள் இறந்து கொண்டிருப்பதும், பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், தமிழக அரசு அதை இட்டுச் செல்கின்ற முறையும் சரியாக இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசைக் தாண்டி அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை.

அதேபோல் அங்கே சிகிச்சை பெற்று வருபவர்களில் பலபேர் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள். பலபேர் இன்னும் அபாயகரமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் சிலர் அனுப்பப்பட்டுள்ளார்கள். எந்த மருத்துவமனையில் யார் சிகிச்சை பெறுவது என்பதில் கூட குழப்பம் நிலவி இருக்கிறது. புதன்கிழமை தான் இது கண்டுபிடிக்கப்பட்டது என்று வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமையே அதிகமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறிவிட்டது. அதோடு மட்டுமல்லாது அடுத்த நாள் கலெக்டரோடு திமுகவை சேர்ந்த எம்எல்ஏவும் உட்கார்ந்து இதை மறைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு அமர்ந்து பொய் சொன்ன எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த பாரபட்சம் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

அது மட்டுமல்ல அவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில் அந்தத் துறையின் அமைச்சரோ, முதலமைச்சரோ அங்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைக்காதது எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு தமிழகத்தில் உள்ள மக்களை மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.  ஜனநாயக நாட்டில் ஒரு குற்றம், ஒரு பிரச்சனை மாநிலத்தில் நடந்தது என்றால் அதைக் கண்டிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது அவர்களை போராடக்கூட  அனுமதிக்கவில்லை'' என்றார்.

Next Story

கள்ளச்சாராய மரணம்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
counterfeiting liquor case ; CM consults with all District Collectors

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதல்வரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனையில்  மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து வருகிறார்.