Skip to main content

18 மாதத்தில் கசந்துபோன காதல்; மருத்துவ மாணவியை கொன்று எரித்த ஐ.டி. ஊழியர்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

IT employee who incident medical student

 

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து கரம் பிடித்த மருத்துவக் கல்லூரி மாணவியை பதினெட்டே மாதங்களில் கொடூரமாக கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த ஐ.டி., ஊழியரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.    

 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுளியில் புலிசாத்து முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பின்பக்கத்தில்  வனப்பகுதி உள்ளது. செப். 23ம் தேதி மாலையில், அந்தப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த சிலர், கோயில் அருகே  இளம்பெண்ணின் சடலம் கிடந்ததையும், முகம் மட்டும் எரிக்கப்பட்டு இருப்பதையும் பார்த்துள்ளனர். அவர்கள் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகர் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.     

 

தடயவியல் நிபுணர்களும் சடலம் கிடந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சடலத்தின் அருகில் சிதறிக் கிடந்த பெண்கள் அணியும் காலணி ஒரு ஜோடி, தாலிக்கொடி உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துவந்து வன்கொடுமை செய்திருக்கலாம் என்றும், திடீரென்று அவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் காவல்துறையினர் சந்தேகித்தனர்.      

 

கொலையுண்ட இளம்பெண் யார் என்று உடனடியாக தெரியாத நிலையில், செப். 24ம் தேதி காலை, இளைஞர் ஒருவர், தன்னுடைய காதல் மனைவியை கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகச் சொல்லி, தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அந்த இளைஞர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முரளிகிருஷ்ணன்(24) என்பதும், ஐ.டி. நிறுவன ஊழியர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோதுதான் கொலையுண்ட பெண் யார்? எதனால் கொல்லப்பட்டார்? என்பது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.      

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் நம்மிடம் பேசினர். “கொலையுண்ட இளம்பெண், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கம்போஸ் சாலையைச் சேர்ந்த கேசவராஜ் என்பவரின் மகள் கோகிலவாணி(21) என்பது தெரிய வந்தது. அவர், அரியானூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார். முரளி கிருஷ்ணன்தான் கோகிலவாணியை கொன்று, எரித்ததாக ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார். கோகிலவாணியின் தாய்வழி பாட்டி பெங்களூருவில் வசிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய தாயாரும், முரளி கிருஷ்ணனின் சித்தியும் பெங்களூருவில் உள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்து வந்தனர்.     

 

அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் கோகிலவாணியின் தாயார், முரளி கிருஷ்ணனின் பெற்றோர், அவருடைய சித்தி குடும்பத்தாரை மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வரும்படி அழைத்து விடுத்தார். அதன்படி அவர்களும் வந்தனர். அந்த கோயிலில் வைத்துதான் கோகிலவாணியும், முரளி கிருஷ்ணனும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் தங்களுடைய அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டனர். அதன்பிறகு அவர்கள் தினமும் அலைபேசியில் பேசி வந்ததில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.  ஆனால் காதலில் உறுதியாக இருந்த அவர்கள், 18 மாதங்களுக்கு முன்பு, இருதரப்பு பெற்றோருக்கும் தெரியாமல் சேலத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.     

 

திருமணத்திற்குப் பிறகு காதலர்கள் எதுவும் நடக்காதது போல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். வார இறுதி நாட்களில் முரளி கிருஷ்ணன் சேலத்திற்கு வந்து, கோகிலவாணியை ரகசியமாக சந்தித்து விட்டுச் செல்வார். சில நேரங்களில் அவரை கல்லூரிக்கு விடுப்பு எடுக்கச் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளிலேயே பெங்களூருக்கு அழைத்துச் சென்று விடுதியில் அறை எடுத்து தனிமையிலும் இருந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, திடீரென்று காதல் கணவரான முரளி கிருஷ்ணனுடன் கோகிலவாணிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அவருடன்  பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்க்கத் தொடங்கினார்.   

 

இதற்கிடையே, கல்லூரியில் படித்து வரும் சக மாணவர் ஒருவரை கோகிலவாணி காதலித்து வந்ததாகவும், அதனாலேயே அவர் முரளி கிருஷ்ணனை வெறுக்கத் தொடங்கியதையும் காதல் கணவர் கண்டுபிடித்து விட்டாராம். புதிய காதலையும், பிற ஆண்களுடன் பேசுவதையும் உடனடியாக கைவிடுமாறு முரளி கிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இது, கோகிலவாணிக்கு  மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அலைபேசியில் எப்போது பேசினாலும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், சம்பவத்தன்று சேலம் வந்த முரளி கிருஷ்ணன், இருவருக்கும் இடையேயான பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்  கொள்ளலாம் என்று கூறி கோகிலவாணியை அழைத்துள்ளார். அவரும் கல்லூரியில் இருந்து வீட்டுக்குச் செல்லாமல், சேலம் புதிய புதிய பேருந்து நிலையம் வந்திறங்கினார். அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் முரளி கிருஷ்ணன் அவரை அழைத்துக்கொண்டு தீவட்டிப்பட்டி ஜோடுகுளி அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு சென்றார்.     

 

அங்கு சென்றபிறகும் இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த முரளிகிருஷ்ணன், நான் உயிருடன் இருக்கும்போதே இன்னொருவனை பிடித்து விட்டாயா? எனக் கேட்டுள்ளார். அப்போது கோகிலவாணியோ, இனிமேல் நீ தேவை இல்லை என்று அலட்சியமாக கூறியதோடு, முரளி கிருஷ்ணன் கட்டிய தாலியையும் கழற்றி அவர் முகத்தில் வீசியெறிந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோகிலவாணியை கழுத்திலேயே குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கோகிலவாணி துடிதுடித்து இறந்தார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவருடைய முகத்தை கல்லால் சிதைத்த முரளிகிருஷ்ணன், பின்னார் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். மோட்டார்சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்து முகத்தில் ஊற்றி தீ வைத்துள்ளார்.     

 

கையில் கத்தியுடன் வந்ததை பார்க்கையில் அவர் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்திருப்பது ஊர்ஜிதமாகிறது. இந்த சம்பவத்தில் வேறு  யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது,'' என்கிறார்கள் காவல்துறையினர். இதையடுத்து முரளி கிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பெற்றோருக்குத் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்ட இளம்பெண், படுகொலை  செய்யப்பட்ட சம்பவம் ஜலகண்டாபுரம், ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்