
முதலமைச்சரைத் தள்ளிவிட்ட விவகாரத்தில், மாநில உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 11- ஆம் தேதி அன்று புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதியில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது, மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரி ராஜசேகர் என்பவர், புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி சட்டமன்றத்தின் முன்பு திடீரென கூடிய அம்மாநில அரசு பணியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்று, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப் புதுச்சேரி மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்குத் துணைநிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தர ராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், பாதுகாப்பு அதிகாரி ராஜசேகர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.