Skip to main content

கிராவல் மண் ஒப்பந்தத்தில் முறைகேடு; கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் சிபிசிஐடி சோதனை

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Irregularity in Gravel Soil Contract; CBCID police raided the house of the mineral department officer!

 

கிராவல் மண் வெட்டி எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் பேரில், தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு கனிமவளத்துறை இணை இயக்குநர் சுரேஷ் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புதன்கிழமை (செப். 14) திடீர் சோதனை நடத்தினர்.

 

தர்மபுரி நகரம் சூடாமணி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர், சென்னை கனிமவளத்துறை இணை இயக்குநர் நிலை -2 ஆக பணியாற்றி வருகிறார். சில புகார்களின் பேரில் அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். 

 

சுரேஷ், ஏற்கனவே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் துணை இயக்குநர், உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய சொந்த ஊர் சேலம் ஆகும். தற்போது குடும்பத்துடன் தர்மபுரியில் வசிக்கிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது. 

 

Irregularity in Gravel Soil Contract; CBCID police raided the house of the mineral department officer!

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏரி, குளங்களில் கிராவல் மண் எடுக்க டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பின. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுரேஷ், இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருப்பதற்காக நீதிமன்றத்தில் முன் ஜாமீனும் பெற்றார். 

 

இது ஒருபுறம் இருக்க, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புதன்கிழமை (செப். 14) காலை தர்மபுரியில் உள்ள சுரேஷின் வீட்டுக்கு இரண்டு கார்களில் சென்றனர். பத்துக்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அவருடைய வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். 

 

சோதனையின்போது வெளி ஆள்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், வாயில் கதவையும் உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர். அதே பகுதியில் சுரேஷ், புதிதாக ஒரு சொகுசு வீடும் கட்டி வருகிறார். அது பற்றியும் விசாரித்தனர். 

 

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கனிமவளத்துறை இணை இயக்குநர் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.