Skip to main content

''மாணவர்களை குற்றப்படுத்துவதை விடுத்து பிரச்சனைகளின் மூலத்தை கண்டறிய வேண்டும்'' – உளவியல் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேச்சு

Published on 02/05/2022 | Edited on 03/05/2022

 

govt school

 

அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்த்துள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களை கொண்ட அமைப்பாக அரசுப்பள்ளி உரிமைக்குழு இயங்கிவருகிறது. இக்குழுவின் மூலம் 'அரசுப்பள்ளிகள் மீதான உளவியல் தாக்குதல் ஓர் அவசர நிலைப்பார்வை' என்ற தலைப்பில் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளர்களாக கல்வியாளர் ராசி.பன்னீர்செல்வம், அரசு தலைமை மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். முன்னதாக ஆசிரியர் பெரியார் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.

 

govt school

 

மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளும் அதனை அணுகும்  முறையும் குறித்து உளவியல் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேசியதாவது , ''கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விரும்பத்தகாத செயல்களை அடிப்படையாக வைத்து ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் விமர்சனம் செய்து வந்தனர். தற்போது ஒரு சில இடங்களில் நடக்கும் விரும்பத்தகாத மாணவர்களின் நடத்தையைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த அரசுப்பள்ளிகளின் நிலையையும் பொதுமைப்படுத்திப் பார்க்கின்றனர், இது வரவேற்கத் தகுந்ததல்ல. குறுகிய கால மகிழ்ச்சி, கதாநாயக மனப்பான்மை, எதிர்பாலின ஈர்ப்பு, பொது வலைதளங்களின் தாக்கம், சமூக விழுமியங்களை கற்பதற்கான சூழல் இன்மை, பசி, குடும்பங்களின் புறக்கணிப்பு, போதிய பராமரிப்பு , கண்டிப்பு இல்லாமை உள்ளிட்ட காரணிகளால் மாணவர்கள் மன உந்துதலுக்கும், மனவெழுச்சிக்கும் உட்படும்போது சில விரும்பத்தகாத செயல்கள் நடந்தேறுகின்றன. இது தற்காலிக செயற்பாடே ஆகும். இதனால் மாணவர்கள் முழுமையாக உருப்படமாட்டார்கள் என ஒதுக்குவதும், தொடர் புறக்கணிப்பும் மேலும் சிக்கலான மனநிலைக்கு அவர்களை அழைத்து செல்லுமே தவிர வாழ்வில் கரைசேர வாய்ப்பின்றி, தீவிரமான எதிர்மறை செயற்பாடுகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளிவிடும் என்பதே உண்மை. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, அறிவியல் செயற்பாடுகளில் தொடர் நம்பிக்கையூட்டும் செயல்களை முன்னெடுப்பதும், நடத்தை மாற்றத்திற்கு உள்ளான மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், உளவியலாளர்கள் துணையுடன் தேற்றுவதற்கான வலுவான முயற்சிகள் அவசியமானதாகும். மாணவர்களை புறக்கணிப்பதையும், குற்றப்படுத்துவதையும் தவிர்த்து அவர்களின் பிரச்சனைகளின்  மூலத்தை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்'' என்றார்.

 

govt school

 

முன்னதாக  உரை நிகழ்த்திய ராசி பன்னீர்செல்வம், ''தற்போதைய சூழலில் மாணவர் ஆசிரியர் உறவு குறித்த சர்ச்சைக்குரிய காணொளிகள் நாட்டின் சட்டத்தையும் மதிக்காமல் அப்படியே கண்மூடித்தனமாகப் பரப்பப்படுகின்றன. இவை சமூகத்திலும் பெற்றோர்களிடமும் எதிர்மறை உளவியல் சிக்கலை உண்டாக்கி அரசுப்பள்ளிகள் மோசமானவை என்ற கருத்தாக்கத்தை உருவாக்கிட முனைகிறது. உண்மையில் தமிழகம் முழுவதும் இயங்கும் ஒருசில பள்ளிகளில் நிகழும் விரும்பத்தகாத செயல்களை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் பொதுமைப்படுத்த முனைவது ஆபத்தானது. சமூகவலைத்தளங்களில் இயங்குபவர்களும், ஊடகங்களும் தத்தமது பொறுப்பை உணர்ந்து தகவல்களை பகிரவேண்டும்.

 

அரசின் இல்லம் தேடிக்கல்வி, நான் முதல்வன் உள்ளிட்ட புதுமையான திட்டங்கள் மாணவர்களுக்கு நேரடி பயனளிக்கக்கூடியவை, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த அதிகபட்ச நிதி ஒதுக்கீட்டினை மாநில அரசு ஒதிக்கியிருப்பது  புதிய நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது. கல்வித்துறையின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முன்னெடுப்புகள் தொடர்ந்து நிகழ்வதால், அனைத்து மாநிலங்களும் உற்று நோக்குகின்றன.

 

இந்நிலையில் இதுபோன்ற எதிர்மறை பிரச்சாரங்களின் மீதும் பள்ளிக்கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆசிரியர்கள் முழுமையாக கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை எட்ட வேண்டும். விலையில்லா பொருட்கள் வழங்குதல், ஊக்கத்தொகை, மாணவர் வளர்ச்சி மதிப்பீட்டிற்கான கணினி வழி தரவு உள்ளீடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, பொதுத்தேர்வு விண்ணப்பம், சான்றிதழ் உள்ளீட்டுத் தகவல் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்களை நியமித்து, ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை மாணவர்கள் பசியின் காரணமாக  மன அழுத்தத்தோடு கல்விகற்கும் நிலையை கருத்தில் கொண்டு மதிய உணவு வழங்கிட வேண்டும். மாணவர்களின் முகங்களை மறைக்காமல் சமூக வலைதளங்களில் பரப்பும் எதிர்மறை காணொளிகளைப் பரப்புவோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி  உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேரிடர் காலத்தை ஈடுசெய்வதாக மே மாதமும் பள்ளிகளை திறந்திருப்பதும் தேர்வுகளை நடத்துவதும், மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒருவித மன நெருக்கடிக்கு உள்ளாக்கும் செயலாகும். தொடர்ச்சியாக சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்குவது இயந்திரத்தனமானது. இதுநல்ல கல்விச்சூழலை பாதிக்கும். ஏனைய மாநிலங்களைப்போல குறைந்தபட்சம் ஒன்பதாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் வெப்பத்தாக்கத்தின் காரணமாக உடலியல், உளவியல் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு முழு தேர்ச்சி வழங்குவதோடு உடனடியாக விடுமுறை அறிவிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை நாமும் அரசும் இணைந்து முன்னெடுத்தால் குறைந்தபட்ச அளவிலாவது குழந்தைகளையும் அரசுப்பள்ளிகளையும் காக்க முடியும்'' என்றார்.

 

நிகழ்வில் ஆசிரியைகள் மணிமேகலை , மாலினி, வினோதினி , வனிதா, வித்யா, ராதா, கமலம், ஆசிரியர்கள் ரமேஷ்குமார், அழகேசன், மாயக்கண்ணன், ராஜாங்கம், விநாயகமூர்த்தி, சக்திவேல், ஐயப்பன், குருமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியாக ரகமத்துல்லா நன்றியுரை கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.