Skip to main content

விருதுநகரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... அசாமை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேரிடம் விசாரணை!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

விருதுநகரில் திறந்தவெளிக் கழிப்பிடத்தின் புதர் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான நிலையில் சித்திரவதைகளுக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கொங்கலாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். திங்கட்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் விளையாடச் செல்வதாக கூறிவிட்டு பள்ளி சீருடையை கூட மாற்றாமல் வெளியே  சிறுமி விளையாட சென்றதாக கூறப்படுகிறது.

 

POLICE


வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலை ஊரின் அருகே திறந்தவெளிக் கழிப்பிடத்தின் புதர் பகுதியில் பள்ளி சிறுமி ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ந்து இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். சிறுமியின் வீட்டிற்கு சென்றும் அமைச்சர் ஆறுதல் கூறினார். ஆனால் குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

அண்மையில் பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் கோவையில் கூட இதே போன்று ஒரு சம்பவம் நடந்திருந்தது. தொடர்ச்சியாக இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்