Skip to main content

பேருந்து நடத்துநர் கழுத்தை நெரித்து கொலை! ; தீர்த்துக் கட்டிய காதலி!!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

incident in salem... police investigation

 

சேலம் அருகே, ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த காதலி, வாழ்க்கைக் கொடுத்தவரையே கழுத்தை நெரித்துத் தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தை அடுத்துள்ள மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (49). தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்தார். இவர், 28 ஆண்டுக்கு முன்பு புஷ்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 27 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, தளவாய்ப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.

 

இவரும், தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த சித்ரா என்பவரின் மகள் உமா மகேஸ்வரி (35) என்பவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். நாளடைவில் நெருக்கம் அதிகமாகவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். உமாமகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சில ஆண்டாக தாயார் வீட்டில் வசித்து வந்த நிலையில்தான் சுப்ரமணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 11) இரவு சுப்ரமணி தனது வீட்டில் உள்ள கட்டிலில் பேச்சுமூச்சின்றி கிடப்பதாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உறவினர்கள் சென்று பார்த்தபோது சுப்ரமணி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து இரும்பாலை காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முதல்கட்ட விசாரணையில், சுப்ரமணி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சுப்ரமணி வீட்டுக்கு வெள்ளிக்கிழமையன்று இரவு உமாமகேஸ்வரி, 2 ஆண்களை அழைத்து வந்திருக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரியை பிடித்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

 

குடும்ப வாழ்க்கையில் பரஸ்பரம் தோல்வி கண்டிருந்த உமாமகேஸ்வரியும்,  சுப்ரமணியும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அதன்பிறகு ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களுடனும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. வேலைக்காக வெளியே சென்ற நேரங்களில் உமா மகேஸ்வரி, சில ஆண்களை வீட்டுக்கே வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். இதையறிந்த சுப்ரமணி, அவரை பலமுறை கண்டித்திருக்கிறார்.

 

இதை கொஞ்சமும் ரசிக்காத உமா மகேஸ்வரி, இனியும் சுப்ரமணி உயிரோடு இருந்தால், தான் நினைத்தபடி மற்ற ஆண்களுடன் சந்தோஷமாக பழக முடியாது என முடிவெடுத்துள்ளார். இதையடுத்து உமாமகேஸ்வரி, அவருடைய ஆண் நண்பர்களான செங்காட்டூரைச் சேர்ந்த நாகராஜன், கண்ணன் ஆகியோர் மூலம் சுப்ரமணியை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டார். இத்திட்டத்துக்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

அதன்படி, ஜூன் 11ம் தேதி இரவு அவர்கள் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுப்ரமணியின் கை, கால்களை ஆண் நண்பர்கள் இறுக்கிப் பிடித்துக்கொள்ள, உமாமகேஸ்வரி சுப்ரமணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

 

கொலை திட்டத்தை நிறைவேற்றியதும் ஆண் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். ஆனால் உமா மகேஸ்வரி எதுவும் தெரியாததுபோல் அங்கே இருந்துள்ளார். பின்னர் அவரே தன் கணவர் மூச்சு பேச்சின்றி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

தலைமறைவான உமா மகேஸ்வரியின் ஆண் நண்பர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.