Skip to main content

பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை கொன்ற தந்தை, உறவினர் கைது!!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
incident in pudukottai



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த மாதம் 18 ந் தேதி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்ற 13 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் சகோதரிகள் தேடிச் சென்றபோது அரை கி.மீ தூரத்திற்கு அந்தப்பக்கம் தைலமரக்காட்டில் கழுத்து நெறிக்கப்பட்டு வாய் பேச முடியாத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் 6 தனிப்படைகளை அமைத்து சிறுமி கொலைக்கு காரணமானவர்களை தேடுவதாக கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் கொலையாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் என்றனர். போலீசார் உத்தரவாதம் கொடுத்த பிறகு சடலம் வாங்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 

 

incident in pudukottai


மகளின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தாய் இந்திரா காவல் நிலையத்தில் கொடுத்திருந்த நிலையில் சந்தேகப்பட்ட அனைவரையும் போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்தனர். ஆனாலும் மகள் இறந்த வருத்தம் இல்லாமல் சகசஜமாக இருந்த தந்தை பன்னீர் மீது உறவினர்கள் முதல் போலீசார் வரை அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

அனைத்து சடங்குகளும் முடியும் வரை காத்திருந்த போலீசார் அதன் பிறகு பன்னீரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. செல்வம் நிறைய சேர வேண்டும் என்றால் மகளை பலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை பெண் மந்திரவாதி வசந்தி சொன்னதால் தனது இரண்டாவது மனைவி மூக்காயி மற்றும் உறவினர் குமாருடன் இணைந்து மகளை கொல்ல திட்டமிட்டதுடன், முதல் நாள் இரவு பிடாரி கோயில் அருகில் உள்ள குளத்தில் பெண் மந்திரவாதி பூஜைகள் செய்துள்ளார். அவர்களுக்கு துணையாக முருகாயி என்ற பெண்ணும் இருந்துள்ளார்.

 

incident in pudukottai


பூஜை நடந்து முடிந்த மறுநாள் குடிதண்ணீர் எடுக்க தனியாக சென்ற மகளை தைலமரக்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற பன்னீர், குமார் மற்றும் தனது இரண்டாவது மனைவியுடன் இணைந்து சிறுமியின் கழுத்தை துண்டு மற்றும் சேலையால் நெறிக்க துடிதுடிக்க மயங்கி கீழே சரிந்த பிறகு மற்றவர்களை போகச் சொல்லிவிட்டு சந்தேகம் வராமல் இருக்க மயங்கிக் கிடந்த மகளின் உள்ளாடைகளை கழற்றிவிட்டு இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகே தாய் இந்திரா தேடிச் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.


இந்தநிலையில் கடந்த 30 ந் தேதி தனது இரண்டாவது மனைவி மூக்காயியும் உடல்நலமின்றி இறந்துவிட்டார். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் அறிக்கை கொடுத்துள்ளனர். இதில் பன்னீர் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய துண்டு, சேலை, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பெண் மந்திரவாதி மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் தேடி வருகின்றனர்.

நரபலி பூஜை என்றால் பூஜை நடக்கும் போதோ அல்லது சிறுமியின் ரத்தத்தை வைத்தோதான் பூஜை செய்யப்படும். ஆனால் இங்கே பூஜை முதல் நாள் நடந்து முடிந்த பிறகு சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் இருந்து ரத்தமும் எடுக்கப்படவில்லை. அப்பறம் எப்படி நரபலிக்காக சிறுமி கொல்லப்பட்டிருக்க முடியும். வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் உறவினர்களிடம் எழுந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.