Skip to main content

கோஷ்டி தகராறில் வாலிபர் உயிரிழப்பு... போலீஸ் குவிப்பு!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

incident in marakkanam

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் 45 வயது தங்கராஜ். கட்டிட மேஸ்திரியான இவர் கரோனா  ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அபின் என்கிற ராமதேவ் (வயது 27)  என்ற இளைஞர் நண்பர்கள் 6 பேருடன் அங்கு வந்துள்ளார். இரு தரப்பினரும் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றி திடீரென இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருதரப்பினரையும் பிரச்சனை வேண்டாம் ஒரே ஊரில் வசிக்கும் உங்களுக்கு எதற்கு சண்டை சச்சரவு என்று கூறி இரு தரப்பினரையும் ஒதுக்கிவிட்டுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட அவரவர் வீடுகளுக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு தனது நண்பர்களுடன் தங்கராஜ் குடியிருந்த பகுதிக்குச் சென்ற ராம்தேவ் மற்றும் அவரது நண்பர்கள் தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்களிடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் மீண்டும் தடி இரும்பு போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

 

இந்த மோதலில் ராம்தேவ் தங்கராஜ் ஆறுமுகம் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கலவரம் நடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த ராம்தேவ் மற்றும் ஆறுமுகத்தை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆறுமுகம் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ராம்தேவ் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராம்தேவ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரு தரப்பினரும் மரக்காணம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம், ஐயப்பன், செந்தில், ஏகாம்பரம். அதேபோல் ராம்தேவ் நண்பர்கள் பூவரசன். ஆகாஷ் உட்பட இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ராம்தேவ் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால். கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.