Skip to main content

கோஷ்டி தகராறில் வாலிபர் உயிரிழப்பு... போலீஸ் குவிப்பு!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

incident in marakkanam

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் 45 வயது தங்கராஜ். கட்டிட மேஸ்திரியான இவர் கரோனா  ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அபின் என்கிற ராமதேவ் (வயது 27)  என்ற இளைஞர் நண்பர்கள் 6 பேருடன் அங்கு வந்துள்ளார். இரு தரப்பினரும் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றி திடீரென இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருதரப்பினரையும் பிரச்சனை வேண்டாம் ஒரே ஊரில் வசிக்கும் உங்களுக்கு எதற்கு சண்டை சச்சரவு என்று கூறி இரு தரப்பினரையும் ஒதுக்கிவிட்டுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட அவரவர் வீடுகளுக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு தனது நண்பர்களுடன் தங்கராஜ் குடியிருந்த பகுதிக்குச் சென்ற ராம்தேவ் மற்றும் அவரது நண்பர்கள் தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்களிடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் மீண்டும் தடி இரும்பு போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

 

இந்த மோதலில் ராம்தேவ் தங்கராஜ் ஆறுமுகம் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கலவரம் நடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த ராம்தேவ் மற்றும் ஆறுமுகத்தை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆறுமுகம் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ராம்தேவ் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராம்தேவ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரு தரப்பினரும் மரக்காணம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம், ஐயப்பன், செந்தில், ஏகாம்பரம். அதேபோல் ராம்தேவ் நண்பர்கள் பூவரசன். ஆகாஷ் உட்பட இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ராம்தேவ் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால். கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.