Skip to main content

4  கோடி ஆன்லைன் பரிசு...  அப்பாவிகளை ஏமாற்றும் ஆன்லைன் டுபாக்கூர்கள்... தப்பிய கோவில்பட்டி தொழிலாளி!!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
incident in kovilpatti

 

ஜெட் வேகமெடுக்கும் கரோனா பரவல் தற்போது தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை வந்துவிட்டது. ஐந்து மாதங்கள் கடந்தும் தடுப்பு மருந்து இல்லாத நிலையில், தடுப்புக்கு ஊரடங்கு மட்டுமே மருந்து என்பது கூட பயனற்றுப் போய்விட்டது. ஒருபுறம் மிரட்டும் கரோனா, மறுபக்கம் வேலையின்மையால் வருமானம் பாதிப்பு. பசி, பிள்ளைகளோடு தவிக்கும் பல தட்டு மக்கள். கரோனா வைரசைக் காட்டிலும் கொடிய கிருமியான வறுமையை எதிர் கொள்ளமுடியாமல் பரிதவிப்பிலிருக்கிறார்கள்.

இந்நிலையில், மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மக்கள் லாக்டவுணில் முடங்கியிருப்பதை வாய்ப்பாக்கிக் கொண்ட ஆன்லைன் கும்பல்கள், ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் பரிசு என்று மக்களிடம் உள்ளதையும் உருவிக் கொண்டிருக்கிறது.

இந்த டுபாக்கூர்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாக ஒரு சிலரே புத்திசாலித்தனமாகத் தப்பியுள்ளனர். அதில் ஒருவர்தான் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரின் சங்கர்ராஜ் என்ற ஹோட்டல் தொழிலாளி.

 

incident in kovilpatti


சங்கர்ராஜின் செல் நம்பருக்கு 4 கோடி பரிசு விழுந்துள்ளதாக ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதையடுத்த சில நொடிகளில் அவரது நம்பரில் தொடர்பு கொண்ட ஒரு நபர், பிரிட்டீஷ் மோட்டார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், வாழ்த்துக்களைச் தெரிவித்தவர், இந்தப் பரிசுத் தொகையைப் பெறுவதற்காக 16 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சிறிது நேரத்தில் ரிசர்வ் வங்கியிலிருந்து வரும் அழைப்பில் சொல்லுவார்கள் என்ற பிறகு லைனில் வந்த பெண் ஒருவர் அதையே வலியுறுத்தியிருக்கிறார்.

அதன்படியே தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 16 ஆயிரம் ஸ்டேட் வங்கிக் கணக்குக்கு அனுப்புப்படியும், அனுப்பிய பிறகு ரிசர்வ் வங்கிக்கு அதன் விபரத்தை ரிசர்வ் வங்கியின் இ மெயிலுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியவர் எப்போது செலுத்துவீர்கள் என்றும் கேட்டுள்ளார். தொடர்ச்சியாகப் போன் அழைப்பு வந்ததால் சங்கர்ராஜ் தன் வீட்டு நகையை அடகு வைத்து பணம் செலுத்தத் தயாரானவர்,ஏதோ ஒரு சந்தேகத்தில் தன் ஹோட்டல் முதலாளி கணேஷ்குமாரிடம் விசயத்தைச் சொல்ல, அவரோ ஏமாற வேண்டாம் பணம் செலுத்த வேண்டாம் என்று சொன்னதும், தன் முடிவை மாற்றிக் கொண்டார் சங்கர்ராஜ்.

விடாக் கண்டனாக இது குறித்து தொடர் போன் வர, அவர்களிடம் பேசிய கணேஷ்குமார். 4 கோடி பரிசு விழுந்திருப்பதால் வரியாக அதில் 16 ஆயிரத்தைக் கழித்துக் கொண்ட மீதிப் பணத்தைத் தாருங்கள் என்று கொடாக் கண்டனாய்ப் பதிலளித்தவரிடம், பணம் செலுத்தியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் நம்பர் கொடுங்கள் என்று கேட்டதற்கு மறுத்திருக்கிறது எதிர்முனை.

இந்தத் தொல்லை தாங்க முடியாமல் போன கணேஷ்குமார் இது குறித்து கோவில்பட்டி நகர ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் தெரிவித்ததில், அவரோ இது போன்ற நடைமுறைகள் ரிசர்வ் வங்கியில் கிடையாது. அவர்களின் நம்பர் டெல்லியிலுள்ள ஒரு பெண்ணின் கணக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்குப் புகார் தெரிவித்தவர்கள், சைபர் க்ரைமிலும் புகார் செய்ய உள்ளனர்.

ஆன்லைன் டூபாக்கூர் பரிசு தொடர்பான விடாக்கண்டன் கொடாக்கண்டன் விவகாரம்,நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.