Skip to main content

ஆள்மாறாட்டம் மோசடி.. அதிமுக பிரமுகருக்கு சிறை தண்டனை

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

Impersonation fraud.. Jail sentence for ADMK leader!

 

திருச்சி, மணப்பாறையை அடுத்த போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (60) இவர் மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கும் மணப்பாறையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், மாற்றுத் திறனாளியுமான நிர்மலாதேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ள நிலையில் மற்றொரு பெண்ணான நிர்மலா தேவி (இருவருக்கும் ஒரே பெயர்) என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியான நிர்மலா தேவி தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

 

இந்நிலையில் முதல் மனைவியான ஆசிரியை நிர்மலா தேவியின் பெயரில் மணப்பாறையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை தனது இரண்டாவது மனைவியும் நிர்மலாதேவி என்பதால் ஆள்மாறாட்டம் செய்து (இரண்டாவது மனைவியை முதல் மனைவியாக காண்பித்து) தன்னுடைய பெயருக்கு 2018 ம் ஆண்டு நவம்பரில் மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை மாற்றி பதிவு செய்தார். இந்த மோசடி குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி நிர்மலா தேவி மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து மணப்பாறை போலீசார் சந்திரசேகர் மற்றும் இவரது இரண்டாவது மனைவி நிர்மலாதேவி ஆகிய இருவர் மீதும் 419 மற்றும் 420 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

 

சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவியும் முன்னாள் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினருமான நிர்மலா தேவி மற்றும் சாட்சி கையொப்பம் போட்டவர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

 

இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நிர்மலா தேவி ஆகிய இருவருக்கும் ஒரு பிரிவிற்கு தலா 3 ஆண்டுகள் வீதம் இரண்டு பிரிவுகளுக்கும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மற்ற இருவரையும் விடுதலை செய்து நீதிபதி கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக பிரமுகர்களான கணவன் மனைவி தம்பதிக்கு மோசடி வழக்கில் 6 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ள நிகழ்வு மணப்பாறை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.