பிரசாத் ஸ்டூடியோ இடத்தில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்குமாறு கீழ் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற ஸ்டூடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17- வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், சமரச மையத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாற்பது வருடங்கள் அங்கிருந்துள்ளார். சில நாட்கள் இருக்க அனுமதிப்பதில் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தப் பிரச்சினை தொடர்பாக கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை இரண்டு வாரத்துக்குள் முடித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தீர்ப்பளித்துள்ளார்.