Skip to main content

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு! மாணவியின் தந்தையிடம் மீண்டும் விசாரணை!  

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

IIT student Fatima case. Student's father re-investigated!

 

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துவந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த 2019 நவம்பர் மாதம் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்தது சென்னை பெருநகர காவல்துறை. 

 

சென்னையின் அப்போதைய போலீஸ் கமிஷ்னர் திரிபாதியை சந்தித்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், “எனது மகளின் இறப்பு தற்கொலை போல தெரியவில்லை. அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன, மகளின் இறப்புக்கு நீதி வேண்டும்” என்று புகார் கொடுத்திருந்தார். 

 

இந்த நிலையில், பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அரசியல் கட்சிகளும் பாத்திமாவுக்காக நீதி கேட்டனர். ஐ.ஐ.டி. நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமும் அதன் வளாகமும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன என்று ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகளைக் கூறியபடி போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருந்தன மாணவ அமைப்புகள். 

 

இதற்கிடையே, பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இதனையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது அப்போதைய தமிழ்நாடு அரசு. சி.பி.ஐ.யும் வழக்கை ஏற்றுக்கொண்டது. வழக்கு தொடர்பான அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர் தமிழ்நாடு காவல்துறையினர். 

 

மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவரது தோழிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவியின் மரணத்தில் தொடர்புடையவராக ஒரு பேராசிரியர் இருக்கிறார் என்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட பேராசிரியரிடமும் ஐ.ஐ.டி. நிர்வாகத்திடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாக வெளிப்படையான தகவல்கள் வராத நிலையில், இந்த வழக்கு கடந்த 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. 

 

இந்நிலையில், வழக்கை மீண்டும் கையிலெடுத்திருக்கிறது சி.பி.ஐ. மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் மீண்டும் விசாரிக்க, அவரை தங்களின் அலுவலகத்துக்கு அழைத்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இதனைத் தொடர்ந்து, இன்று (07.12.2021) காலை 10.30 மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகவிருக்கிறார். இந்த வழக்கில் சி.பி.ஐ. சேகரித்துள்ள சில ஆதாரங்களின் அடிப்படையில் அப்துல் லத்தீப்பிடம் தெளிவுப்படுத்திக்கொள்ள அவரை சி.பி.ஐ. வரவழைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.