நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 'போதை ஒழிப்பு மாநாட்டில்' போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வானது நடைபெற்றது.
இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''கடுமையான வெயிலில் நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள். எனவே இந்த கூட்டத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து நீங்கள் பேரணியாக செல்லலாம். நீண்ட நேரம் உங்களை உட்கார வைக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இப்பொழுது புது வியாதி பரவி இருக்கிறது. ஏற்கனவே கரோனா வந்தது, அந்த வியாதியை முறியடித்திருக்கிறோம். இப்பொழுது குரங்கு அம்மை என்று ஒன்று வருகிறது என்று சொல்கிறார்கள். குரங்கு அம்மை வந்தாலும் சரி, வேறு எந்த வியாதி வந்தாலும் இந்த அரசாங்கம் அவற்றை சமாளிக்க தயாராக இருக்கிறது. அவையெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் இப்பொழுது மாணவர்களிடையே, பொதுமக்கள் மத்தியில் ஒரு கடுமையான வியாதி பரவி இருக்கிறது. அதுதான் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது. ஒரு காலத்தில் இவை எல்லாம் யாரோ படிக்காதவர்களிடம் தான் பரவி இருக்கும். ஆனால் இப்பொழுது சமூக விரோதிகள் கொண்டு வந்து கொடுத்து ஒரு இளம் தளிராக இருக்கக்கூடிய பிள்ளைகளையே கருக வைக்கிறார்கள்.
பார்த்தால் பப்பர மிட்டாய் மாதிரி இருக்கும். ஒரு பப்பர மிட்டாயை சாப்பிட்டாலே போதை ஏறும். இரண்டாவது நாள் அதைத் தேடும். மூன்றாவது நாள் முழுக்க அடிமையாகி விடுவார்கள். பாக்கெட்டில் வைத்திருக்கும் அந்த மிட்டாயை பக்கத்தில் உள்ள நண்பனிடம் கொடுத்தால் மறுநாள் அவன் காலி. இவ்வளவு பயங்கரமான நிலை இருக்கிறது. போதைக்கு அடிமையானால் சுயநினைவை இழந்து விடுவோம். அதற்குப் பிறகு வாழ்க்கையில் எதையும் எதிர்க்க வேண்டும், போதைப் பொருட்களை தடுப்பவர்களை கொல்ல வேண்டும் என்று கூட அவர்களுக்கு வைராக்கியம் ஏற்பட்டுவிடும். இதைச் சமூகவிரோதிகள் ஆந்திராவிலிருந்து கடத்திக் கொண்டு வந்து அன்றைக்கு எங்கேயோ ஒரு மூலை முடுக்கில் இருளிலே விற்றுக்கொண்டு இருந்தவர்கள் இன்று பள்ளி வளாகத்திலும், கல்லூரி வளாகத்திலுமே விற்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படியும் தடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலத்திலே வளர வேண்டிய இந்த குழந்தைகள் அரும்பாக இருக்கும் பொழுதே கருகிவிடுவார்கள்'' என்றார்.