Skip to main content

''காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் இந்தியாவும் அப்படி இருந்திருக்கும்''-கே.எஸ்.அழகிரி பேச்சு! 

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

"If there was no Congress party, India would have been like that" - KS Alagiri speech!

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் முசிறியில் 'விவசாயிகள் சங்கமம்' மற்றும் ஏர்கலப்பை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையேற்று பேசுகையில், ''இந்தியாவில் ஒரு பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில் தான். ஆசிய நாடுகளில் எத்தனையோ நாடுகள் இன்று ஏழை நாடாகவும், பின் தங்கியும் உள்ளது. காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் இந்தியாவும் அப்படி  இருந்திருக்கும். பாஜகவுக்கு என்று பெரிய கொள்கையோ கோட்பாடோ கிடையாது. அது எதிர்பாராத ஒரு விபத்து காரணமாகவே ஆட்சிக்கு வந்துள்ளது.

 

காங்கிரஸ் கட்சியை கொள்கை ரீதியாக வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களிடம் நேரடியாக சென்று கருத்துக்களை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார். அவருடைய இந்த அணுகுமுறை பாஜகவை வீழ்த்தும். மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிவதுதான் தேசத்தின் சிறந்த தலைமை ஆகும். புதிய வேளாண் சட்டங்களால் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்க முடியும். 

 

பிரதமர் மோடிக்கும், அவரது நண்பர்களான 5 பணக்காரர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் இந்த வேளாண் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்கள்  அழிக்கப்பட்டுவிட்டது. அதில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று. தென்னகத்தின் செல்போன் நிறுவனமான ஏர்செல் முடக்கப்பட்டு விட்டது.

 

எதிர்காலத்தில் ஜியோ மட்டுமே ஒரே செல்போன் நிறுவனமாக இந்தியாவில் இருக்கும். அதேபோன்றுதான் விவசாயத்தை அழிக்கும் நோக்கத்தில் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் கலப்பு பொருளாதாரம் இருந்தால் தான் தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் மத்திய அரசு ரயில்வே, எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

 

மத்தியில் நடக்கும் ஆட்சி இவ்வளவு மோசம் என்றால், தமிழ் நாட்டில் நடைபெறும்  ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரில் உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தடை பெற்றுள்ளார். இந்த தடை உத்தரவை மேல்முறையீடு செய்ய மோடி வசமுள்ள சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.

 

தற்போது வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக விவசாய கடன் தள்ளுபடி வேண்டும் என்று கத்தி கொண்டு இருந்தோம். ஆனால் தேர்தலுக்காவும், அரசியலுக்காகவும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக அவர் அறிவித்துள்ளார். வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது என்பது அவர்களது கொள்கையில் இல்லாத போது எதிர்க்கட்சியினர் பலம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விவசாயிகள் மீது எவ்வித பற்றும் எடப்பாடிக்கு இல்லை என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள்.

 

மத்தியிலும், மாநிலத்திலும் அதிகார மாற்றம் செய்ய காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும்'' என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.