இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 1.3 கோடி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெறுகின்றனர். இந்த இரண்டாவது அலையின் தொடக்கத்திலேயே கரோனா பாதித்தவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் உருவாகிறது. வயதானவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்போது மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. சுமார் 20 லட்சம் பேர் ஆக்ஸிஜன் சப்போட்டில் இருப்பதால் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையால் இந்தியாவின் வடமாநிலங்களில் பல கரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர்.
இந்தியாவில் இரண்டாம் அலையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மகாராஷ்ட்டிரா, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளா, உத்திரபிரதேசம், டெல்லி, சத்திஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், அரியானா, மத்தியபிரசேதம் போன்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பெரியதும், சிறியதுமாக சுமார் 500 கம்பெனிகள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள் இதுவரை தினசரி 5913 மெட்ரிக் டன் உற்பத்தி செய்துவந்தன. தற்போது அவை 6200 மெட்ரிக் டன்னாக அதன் உற்பத்திகளை அதிகரித்துள்ளது. இவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதில் அதிகபட்சமாக 20 சதவிதம் மட்டுமே மருத்துவமனைகளுக்கானது, மீதியுள்ள 80 சதவிதம் ஆட்டோமொபைல், எக்கு உற்பத்தி மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு அனுப்பபடுகிறது. இதனால் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி என்பது மிகவும் குறைவாக உள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுமைக்கும் 162 கம்பெனிகள் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்குகிறது இந்திய அரசு. இதனை பயன்படுத்திக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், எங்களால் தினமும் 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தர முடியும். அதனால் ஆலையை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என மனு செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 வயது ஸ்லோனின் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நீதிமன்ற தீர்ப்பின்படி மூடப்பட்ட ஆலையை திறக்க அதன் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை உச்சநீதிமன்றத்தில் செய்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, தங்களால் தினமும் 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வழங்க முடியும் எனச்சொல்லி ஆலையை திறக்க அனுமதி கேட்டு மனு செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.