Skip to main content

பத்திரிகையாளர்கள் செயல்பாட்டை பாராட்டிய ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்!!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
IAS and IPS praised the performance of journalists

 

கரோனா காலம் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வியல் சூழலையும் நிலைகுலைய வைத்து வருகிறது. அதில் செய்தியாளர் சமூகமும் கடுமையான நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. இந்த நிலையில் தான், ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விழா 9ந் தேதி காலை ஈரோடு பெரியார் மன்றத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ரமேஷ் முன்னிலை வகிக்க சங்கத்தின் செயலாளரும் நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளரான ஜீவாதங்கவேல் தலைமை வகித்து, கரோனா காலத்தில் பத்திரிகையாளர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்காக உதவ ஈரோடு பத்திரிகையாளர் நலச் சங்கம் எடுத்த முயற்சி ஆகியவை பற்றி பேசினார்.

 

மசாலா பொருட்கள் தயாரிப்பில் தமிழகத்தில் முன்னணி நிறுவனமாகச் செயல்படும் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம், மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட  ஒரு சிப்பம் பொன்னி அரிசி மற்றும் மசாலா பொருட்களைக் கொடுத்தனர். மேலும், உதவும் மனப்பான்மையுடன்  சில நல்ல மனிதர்களின் பங்களிப்போடு சங்கத்தின் முயற்சியால் பருப்பு, புளி, கோதுமை என மொத்தம் 19 வகையான சமையல் பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.யாக பதவி ஏற்ற டாக்டர் சசிமோகன் ஐ.பி.எஸ். கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், “தவறுகளைச் சுட்டிக் காட்டவும், அவற்றை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவும், நல்லது நடப்பவற்றைப் பத்திரிகைகள் ஊக்குவிக்கவும் வேண்டும்" என்றார். மேலும் அவர், "தற்போது உள்ள நெருக்கடி கால கட்டத்தில் சக தோழர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் இது போன்ற சிறப்பான செயலை செய்துள்ளதைப் பாராட்டுகிறேன்” என்றார்.

 

IAS and IPS praised the performance of journalists

 

சென்ற வருடம் இதே போன்று கரோனா கால ஊரடங்கு நெருக்கடியின் போது பத்திரிகையாளர்களின் குடும்பச் சூழலை அறிந்து சக்தி மசாலா நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட அரிசி சிப்பம் மற்றும் மசாலா பொருட்களைக் கொடுத்தனர். அவற்றை ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் செய்தியாளர்கள் குடும்பங்களுக்கு வழங்கியது.  இந்த வருடமும் சக்தி மசாலா நிறுவனத்தின் உதவி பொருட்கள் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், சிவகிரி, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுக்க இருந்து 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் நேரில் வந்து நிவாரண பொருட்களைப் பெற்றுச் சென்றனர். சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், உதவி பொருட்கள் வழங்கிய சக்தி மசாலா நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். சங்க துணைத் தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி, துணை செயலாளர்கள் ராஜா, நவீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தி.க.சண்முகம், பழனிச்சாமி, மகேந்திரன், விஜய் சாய்,பார்த்திபன், பாஸ்கரன், ஜான்சன், வேலுச்சாமி, முருகேசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

 

பத்திரிகையாளர்களின் இன்ப துன்பத்தில் பங்கெடுத்து இது போன்ற நெருக்கடியான கால கட்டத்தில் குடும்ப கஷ்டத்தைப் போக்கும் வகையில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்பங்களும் நேரடியாகப் பயன்பெறும் வகையில் அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் 19 வகையான உணவுப் பொருட்களை தற்போது ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் வழங்கியிருக்கிறது. இவை மட்டுமல்ல நலச் சங்கம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட அமைச்சர் சு.முத்துச்சாமி, கடந்த 7 ந் தேதி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி வழங்கினார். இந்த நிகழ்வும் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் முன்னின்று நடத்திய நிகழ்வாகும். இந்நிலையில், தமிழகத்திற்கே முன்னுதாரணமாகச் செயல்படும் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சிறப்பான  செயல்பாட்டைப் பாராட்டுவதாக  ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.