Skip to main content

“அவர் இறந்த பொழுது ரொம்ப பயந்தேன்.... ஆனால் இப்போ...”- நெகிழ்ந்த வானதி!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம் - சீன ராணுவம் இடையேயான மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் இன்று தமிழக பாஜக தலைமையகத்தில் அண்ணாமலை முன்னிலையில்  சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான கணபதி சுப்பிரமணியம், மறைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதியிடம் ஒரு கிரவுண்ட் வீட்டுமனையை வழங்கினார். மேலும் தனது கணவர் பழனியின் உருவச்சிலையைச் சீதக்காதி ஸ்டேடியத்தில் நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

 

அவரது கோரிக்கையை ஏற்றுப் பேசிய அண்ணாமலை, இந்த விஷயத்தில் அரசியலை உட்புகுத்தாமல் நிச்சயமாகப் பழனியின் உருவச்சிலையை நிறுவாமல் ஓய மாட்டோம் என உறுதியளித்தார். அதன் பின்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மறைந்த ராணுவ வீரரின் மனைவி கூறியதாவது, “என் கணவர் என்னைத் தனியாக விட்டுப் போகவில்லை; எல்லாரும் இருக்காங்க என்பதை ஒரு உணர்வுப் பூர்வமாக நான் பார்க்கிறேன். யாரென்றே தெரியாத ஒருவர் ஒரு சொந்தமா அப்பாவா, அம்மாவா நான் இருக்கேன் என்று பக்கத்தில் இருப்பது ஒரு மிகப் பெரிய செயல். இந்த சமூகத்தில் தொடர்ந்து வாழ முடியுமா என்பதை நினைத்து அவர் இறந்தபொழுது ரொம்ப பயந்தேன், ஆனால் அதன்பின்பு நிறைய நல்ல விஷயங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நான்.

 

ஒரு ஆட்டோகாரங்ககூட பழனி அண்ண பேமிலி பார்த்துக்கொண்டுபோய் இறக்கி விட்டு வாங்கனு சொல்றாங்க. இந்த மக்கள் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கணவர் இருந்தா என்ன பாதுகாப்பு, அரவணைப்பு கொடுப்பாரோ அதை மக்களிடம் நான் பார்க்கிறேன். அதைப் பார்ப்பதோடு மட்டுமின்றி உணர்வுப்பூர்வமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் இந்த விஷயத்திற்காகக் கணபதி சுப்பிரமணியம் அப்பாவிற்கு உண்மையாகவே ரொம்ப நன்றி கடன்பட்டிருக்கிறேன். இதனை நான் என் கணவருக்குக் கிடைத்த பெரிய மரியாதையாகத் தான் நினைச்சிட்டு இருக்கேன். இப்ப என் பையன் ஆர்மிக்கு போவேன்னு சொல்றான், ஆனால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் போகனும் அதற்கு இதெல்லாம் மிகப் பெரிய வழிகாட்டியா இருக்கும் என நம்புறேன்” எனத் தெரிவித்தார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.