Skip to main content

"அமைச்சர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு அதிகாரிகளை நேரில் அழைத்து பேச இருக்கிறேன்" - முதல்வர் பேச்சு

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

dmk

 

தென்காசியில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 'பொதிகை எக்ஸ்பிரஸ்' ரயிலில் சலூன் கோச்சில் தென்காசி புறப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில், இன்று தென்காசி கணக்குப்பிள்ளை வலசை பகுதியிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த நலத்திட்ட விழாவில் சுமார் 182 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய முதல்வர், ''அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களைத் தீட்டி வருவது மட்டுமல்ல, அந்தத் திட்டங்களால் தமிழகம் உயர்ந்து வருவதைக் கண்ணுக்கு முன்னால் நான் பார்க்கிறேன். நாள்தோறும் எங்களுக்குக் கிடைக்கின்ற செய்திகள் இதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

 

ஒன்றிய அரசின் சார்பில் வெளியாகக் கூடிய புள்ளி விவரங்களைப் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி கண்ணுக்குத் தெரியும். சில தன்னார்வல அமைப்புகள் வெளியிடுகின்ற அளவீடுகளைப் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தெரியும். ஆங்கில ஊடகங்கள் வெளியிடுகின்ற கட்டுரைகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிரமிப்போடு எழுதுகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. எல்லாப் பிரிவினரையும் அரசு உயர்த்தி வருகின்றது என்பதற்கான திட்டவட்டமான சான்றுகளாக அமைந்திருக்கிறது.

 

இவை அனைத்திற்கும் மேலாக பயனடைந்த மக்களுடைய மனங்களில் உருவாகி வரக்கூடிய மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். தென்காசியிலிருந்து இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு 15 நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடலாம் .ஆனால், இங்கு நாங்கள் வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. என்ன காரணம்... வரும் வழியெல்லாம் சாலைகளில் இருபுறங்களிலும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் நின்று கொண்டு என்னை வரவேற்றது மட்டுமல்ல; வாழ்த்தியது மட்டுமல்ல; 'இந்த ஆட்சிதான் தொடர வேண்டும்... இந்த ஆட்சி தான் தொடர வேண்டும்...' என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்திய அந்தக் காட்சியை நான் பார்த்தேன். இதுதான் நல்லாட்சிக்கு அடையாளம்.

 

திட்டமிடுவது, செயல்படுத்துவது, அதை நிறைவேற்றுவது தான் என்னுடைய பணியாக இருக்கிறது. திட்டத்தை அறிவித்தோம், நிதியை ஒதுக்கினோம், அதோடு கடமை முடிந்து விட்டது என்று இல்லாமல் ஒவ்வொரு நாளும் அதை நான் கண்காணிக்கிறேன். ஒரே காலத்தில் அனைத்துத் திட்டங்களையும் முடிப்பது தான் என்னுடைய இலக்கு என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணத்தை நடத்தி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பணிகளை முடித்துக் கொண்டு வருகிறேன். திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா என ஒவ்வொரு மாவட்டத்திலும் முடித்துக் கொண்டு வருகிறேன். அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக இந்தத் திட்டப் பணிகள் குறித்து குறிப்பிட்ட மாவட்டத்திற்கு நான் வந்து ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

 

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட பணிகள் நடைபெறுவதை நானே பார்த்து அந்த பணிகளை முடுக்கி விடப் போகிறேன். அமைச்சர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு அலுவலர்கள், அதிகாரிகளை எல்லாம் நேரில் அழைத்துப் பேச இருக்கிறேன். நாங்கள் என்ன நோக்கத்திற்காக இந்தத் திட்டங்களைத் தீட்டித் தருகிறோமோ, அதே நோக்கம் கடைநிலை அலுவலர்கள் வரை இருந்தால்தான் அந்தத் திட்டத்தினுடைய நோக்கம் முழுமையடையும். 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களோடு இருந்து கற்றுக் கொள்' என்று சொன்னார் அறிஞர் அண்ணா. அதன்படி மக்களுக்கான அரசாக நம் அரசு செயல்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.