Skip to main content

கொதிக்கும் சாம்பாரை மனைவி மீது ஊற்றிய கணவன்; குடிபோதையில் வெறிச்செயல்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Husband pours boiling sambar on wife

 

ஓமலூர் அருகே மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிவிட்டு தலைமறைவான கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கருப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் ராகவன் (42). இவருடைய மனைவி நித்யா (37). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ராகவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. சரியாக வேலைக்குச் செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது. மது போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததோடு, அவருடைய நடத்தையிலும் சந்தேகப்பட்டு தாக்கி வந்துள்ளார். 

 

இந்நிலையில், நவ. 22ம் தேதி மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராகவன், அங்கே சமையல் செய்து கொண்டிருந்த நித்யாவிடம், இன்று என்ன குழம்பு வைத்தாய்? எனக்கேட்டுள்ளார். காய்கறிகள் வாங்க காசில்லாததால் தக்காளி பழத்தை மட்டும் போட்டு சாம்பார் வைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். 

 

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து மனைவி மீது ஊற்றினார். இதில் நித்யாவின் தாடை, மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நித்யாவை மீட்டு உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், நித்யா அளித்த புகாரின்பேரில் கொதிக்கும் சாம்பாரை உடல் மீது ஊற்றியது தொடர்பாக ராகவன் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினருக்கு பயந்து கொண்டு ராகவனும் தலைமறைவானார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.