இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா அருகே உள்ள அடஞ்சேரியில் வசித்து வரும் பொன்னையா மகன் லாடமுருகன், அவரது மனைவி முத்துலெட்சுமி இருவரும் காதலித்து சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கணவர் சரியாக வேலைக்கு செல்லாததால் அவர்கள் குடும்ப நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர். லாடமுருகன், எப்பொழுதாவது கூலி வேலை செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கடல் தொழில் செய்யும் மீனவர்களுடன் தன் கணவரை அனுப்பி வைத்துள்ளார் முத்துலெட்சுமி.
கடலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப குறைந்தது 15 நாட்களாகும். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால் கடலுக்கு சென்ற மூன்று நாட்களுக்குள் என்னை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறி கடலுக்குள் குதித்துவிட்டாராம். உடனடியாக மீனவர்கள் அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து அவரை விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்துள்ளானர்.
இந்நிலையில் லாடமுருகன் நேற்று இரவு அவரது மனைவி தூங்கும் போது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அவரும் மின்விசிறியில் கட்டுகம்பியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடலையும் கைப்பற்றிய ஏர்வாடி காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.