Skip to main content

கணவருடன் தகராறு: மனைவியின் அவசர முடிவால் சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

husband and wife incident police investigation

 

சேலம் அருகே, கணவருடன் ஏற்பட்ட தகராறில், பெற்ற தாயே மகன்கள் இருவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கே.மோரூர் காட்டு வலவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி மரகதம் (வயது 30). இவர்களுக்கு செல்வகணபதி (வயது 7), கோகுலகண்ணன் (வயது 5) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். 

 

கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. திருமணம் ஆனது முதலே அவர்களுக்குள் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (பிப். 14) காலையில் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

கோபம் அடைந்த கணவன், வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். மனம் விரக்தி அடைந்த நிலையில் இருந்த மரகதம், இனியும் கணவருடன் வாழ்ந்து பயனில்லை எனக் கருதி, குழந்தைகளுடன் இறந்துவிட முடிவெடுத்துள்ளார். 

 

இதையடுத்து, தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளார். மகன்கள் இருவரையும் முதலில் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். அதன்பிறகு அவரும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  

 

வெளியே சென்ற கணவன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அங்கே மனைவியும், குழந்தைகளும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தின்பேரில் கிணற்றடிக்குச் சென்று பார்த்தபோது கிணற்றில் குழந்தைகள் அணிந்திருந்த துணிமணிகள் மிதந்தது தெரிய வந்தது. 

 

குழந்தைகளுடன் மனைவியும் கிணற்றில் குதித்து இறந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த பிரபாகரன், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் கிணற்றில் தேடிப்பார்த்தும் சடலங்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும், தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

 

தீயணைப்பு வீரர்கள் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் மரகதம் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். காவல்துறையினர் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பிரபாகரன், உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்பத் தகராறில் மகன்கள் இருவரையும் கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கே.மோரூர் காட்டு வலவு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.