Skip to main content

நான் வாழ்க்கையில் எவ்வளவோ இழந்திருக்கிறேன்... கண் கலங்கிய துரை வைகோ!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

How much have I lost in life ...durai vaiko pressmeet

 

ம.தி.மு.க.வின் தலைமைக் கழகச் செயலாளராக அண்மையில் கட்சியினரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நியமனம் செய்யப்பட்ட துரை வைகோ தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தின் கலிங்கப்பட்டி செல்லும் வழியில் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, "வாக்கெடுப்பில் 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். என் மீது நம்பிக்கை வைத்து தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாகவே செய்வேன். எங்கள் குடும்பம் முழுக்க முழுக்க அரசியல் தொடர்புடையது தான். நான் என் தந்தையைப் போல சொல்லாற்றல் இல்லாவிட்டாலும், நான் கட்சிக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். அரசியலுக்கு வருவேன், பிரச்சாரம் செய்வேன் என்று கனவிலும் நான் நினைத்து பார்த்ததில்லை. 

 

அரசியலுக்கு வருவது என்பது எனக்காக அல்ல. ம.தி.மு.க. என்ற இயக்கத்திற்காகவும், எதிர்காலம் பொருட்டும் எடுத்த முடிவு. குடும்பத்தாருடன் முழுநேரமும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அரசியலுக்கு வரவேண்டிய காலத்தின் கட்டாயம் காரணமாக வரவேண்டியதானது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அதிகாரமிருக்க வேண்டும். எனவே வருங்காலங்களில் நான் கண்டிப்பாகத் தேர்தலில் போட்டியிடுவேன். 

 

இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே, எனக்கும், தொண்டர்களுக்குமான இலக்கு என்று அழுத்தமாகச் சொன்ன துரை வைகோ, விடுதலைப் புலிகள் ஆதரவுப் பேச்சால் என் தந்தை அமெரிக்கா உள்பட வெளிநாடு செல்ல பல நாடுகள் தடை விதித்திருக்கின்றன. அதனால் தந்தையால் 15 ஆண்டுகளாக அமெரிக்காவிலிருக்கும் என் சகோதரியைப் பார்க்க முடியவில்லை. கனடாவில் படிக்கும் எனது மகளையும் பார்க்க முடியவில்லை. 

 

அந்த நிலை எனக்கும் வரக் கூடாது என்றும் என்னை அரசியலுக்கு வரக்கூடாது என்று என் குடும்பத்தார் சொன்னதையும் நான் ஒதுக்கிவிட்டு கட்சிக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நான் வாழ்க்கையில் எவ்வளவோ இழந்திருக்கிறேன்" என்று சொன்ன துரை வைகோவின் கண்கள் கலங்கின.

 

பேட்டியின் போது ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மருத்துவரணி செ. டாக்டர் சுப்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.