Skip to main content

மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் எவ்வளவு? -மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020
highcourt chennai

 

மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களின் அளவு எவ்வளவு என்பது குறித்து முழுமையான பதிலளிக்க, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

 

கரோனா ஊரடங்கால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தை கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறியிருந்ததை, மனுதாரர் சூரியபிரகாசம் சுட்டிக்காட்டினார்.

 

அவரது வாதத்தை மறுத்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் பிரபாவதி, தமிழகத்தில் 5.66 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.  சென்னையில் மட்டும் 58,509 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கின்றனர்.  இவர்களில், 4.60 லட்சம் தொழிலாளர்களுக்கு மே மாதம் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்கப்பட்டுள்ளன.  ஜூன் மாதம்,  4.67 லட்சம் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

 

இதையடுத்து, தமிழக அரசு மீது மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கவுன்சிலிங் மையங்கள் அமைப்பது குறித்தும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்த வழக்கு,  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன் ஆஜராகி, முழுமையான பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றும், வழக்கை இரண்டு வாரம் ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மத்திய அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்  வழக்கை ஒத்திவைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.