Skip to main content

எப்படி இறந்தார் தலைமை ஆசிரியர்? காவல்துறை தீவிர விசாரணை! 

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

How did the head teacher passes away? Police serious investigation!

 

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நகரில் வசித்துவருபவர் செல்வராஜ் (58). இவரது மனைவி உஷாராணி. இவர்களுக்குப் பொறியியல் படித்த இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். செல்வராஜ், அதே பகுதியில் உள்ள ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி உஷாராணி, உஞ்சினி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். 

 

நேற்று முன்தினம் (05.10.2021) வழக்கம்போல் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் செல்வராஜ், பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான உடையார்பாளையம் நோக்கி புறப்பட்டுள்ளார். ஆனால், இரவான பிறகும்கூட செல்வராஜ் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அதனால், அவரது குடும்பத்தினர் அவர் செல்ஃபோன் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளனர். அவர் ஃபோனை எடுக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், அவர் வேலை பார்க்கும் பள்ளியின் சக ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர்கள், செல்வராஜ் பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று வெகு நேரம் ஆகிறது என்று தகவல் கூறியுள்ளனர். இதனால், அவர்கள் மேலும் பதற்றமடைந்தனர். 

 

இந்த நிலையில், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இருந்து உடையார்பாளையம் வரும் வழியில் சோழன் குறிச்சி அருகே சாலையோரம், ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு அருகே இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் உடையார்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த காவல்துறையினர், செல்வராஜ் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து செல்வராஜின் மனைவியும், மகள்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். 

 

செல்வராஜ் வரும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்துள்ளது. சாலையில் ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், செல்வராஜ் உடலில், கழுத்தில், இடுப்பில் வெட்டப்பட்டது போன்ற காயங்கள் இருந்துள்ளன. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

இந்த மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. விபத்தில் அவர் உயிரிழக்க வாய்ப்பு இல்லை. மேலும், அவரது கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன. அது எப்படி ஏற்பட்டிருக்கும்? எனவே யாரோ வழிமறித்து அவரை வெட்டிக் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் ஆசிரியர் செல்வராஜ் மரணம் குறித்து வழக்குப் பதிவுசெய்து, விபத்தில் இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். 

 

மேலும், ஆசிரியர் செல்வராஜ் அப்பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது உண்டு என்றும் அப்படி பணம் கொடுக்கல் வாங்கலில் யாருக்காவது முன்விரோதம் இருந்து, அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, அவரை வழிமறித்து கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரேதப் பரிசோதனையில் ஆசிரியரின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.