Skip to main content

படிப்பிற்காகப் பிள்ளைகளின் பாசத்தை இழக்கும் பெற்றோர்! - கண்டுகொள்ளாத எம்.எல்.ஏ!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
hill dwellers are suffering from restlessness near Javvadu Malai range

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன.  அவற்றுள் அணைக்கட்டு தாலூக்காவில் ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள பீஞ்சமந்தை ஊராட்சியில் சுமார் 48 மலைக்கிராமங்கள் உள்ளனர். இந்த ஊராட்சியைச் சேர்ந்த மலை கிராமங்களான கட்டியப்பட்டு, தேந்தூர், புளிமரத்தூர், பாலாண்டூர், புதூர், கோராத்தூர், சாட்டாத்தூர், குடிகம், புதுகுப்பம், குப்சூர், பிள்ளையார் குட்டை, பெரிய கொட்டான்சட்டு, சின்ன கொட்டான் சட்டு, நாச்சிமேடு உள்ளிட்ட 14 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் சிறியவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் மலைக்கிராமத்தில் இருந்து தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கும் அன்றாட தேவைகளுக்கும் மலையிலிருந்து கிழே இறங்கி சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூர் பகுதிக்குத்தான் செல்லவேண்டிய சூழலில் உள்ளனர். மேலும் அவசர தேவையான மருத்துவ வசதிக்கு கூட ஒடுகத்தூர் தான் வரவேண்டும்.

இந்த நிலையில் இவர்கள் பயன்படுத்தும் சாலை ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் எனும் கிராமத்தில் இருந்து கட்டியப்பட்டு மலைக்கிராமம் வரையில் உள்ள சாலையே இவர்களின் பிரதான சாலையாகவும் இருந்து வருகிறது. மேலும் இந்தச் சாலையானது கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது இதனால் இந்த மலைவாழ் மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு இந்தச் சாலையை மலைவாழ் மக்களே வனத்துறையினர் எதிர்பையும் மீறி தங்களுக்காக அந்தப் பகுதியில் தற்காலிக மண்சாலையை அமைத்து கொண்டுள்ளனர். இதன் பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு வனத்துறையினர் மூலம் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில்  சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி ஆனது துவங்கி நடைபெற்று வந்ததாகவும் அந்தச் சாலை பணியும் முழுமையாக போடப்படாமல் ஆங்காங்கே சிறிது தொலைவிற்கு சாலைகள் போடப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதேபோல் சிறிது தொலைவிற்கு போடப்பட்ட சாலைகளும் நான்கு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் சேதம் அடைந்து விட்டதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். மேலும் இங்கு சரியான சாலை வசதி இல்லாததாலும் கல்வி கற்க உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் இல்லாததாலும் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்பாடி பகுதியிலும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகொண்டா பகுதியிலும் உள்ள பள்ளிகளில் சேர்த்து அரசு விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைத்து வருகின்றனர்.  இதனால் தங்களின் பிள்ளைகளுக்கு தங்கள் மீது பாசம் இல்லாமல் இருப்பதாகக் கடும் மன வேதனையுடன் பாசத்திற்காக ஏங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

hill dwellers are suffering from restlessness near Javvadu Malai range

இதனைத் தொடர்ந்து மலையில் உள்ள கர்ப்பிணிகள் பிரசவிக்கும் போது அவர்களை அழைத்துச் செல்ல வரும் ஆம்புலன்ஸ் கூட மேலேயே பிரசவம் பார்த்த பின்னர்தான் அவர்களை கீழே அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்ப்பதாகவும் சாலை வசதி சரியாக இல்லாததால் நடுவழியில் பிரசவித்தால் பிரச்சனை ஏற்படும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூட சில சமயங்களில் பயப்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே முறையான மருத்துவ வசதிகளும் சாலை வசதியும் இருந்தால் பயப்படாமல் எங்கள் ஊரிலே நாங்கள் பிரசவம் பார்த்துக் கொள்வோம் என்று கூறுகின்றன.

இதேபோல் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட பீஞ்சமந்தை மலைக்கிராமத்திற்கு செல்ல வேண்டும் அவ்வாறு செல்ல சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே தங்கள் ஊராட்சியே தனி ஊராட்சியாகவும் பிரித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். அதேபோல் அவசர தேவைக்கான மருத்துவ வசதிகளும் சாலை வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது குறித்து தொகுதியின் எம்எல்ஏவாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள நந்தகுமாரிடம் முறையிட்ட போது பெரியதாக இதன் மீது ஆர்வம் காட்டவில்லை என மக்கள் குறை கூறினர். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலையில் நின்று கோஷங்கள் எழுப்பி தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனார்.

சார்ந்த செய்திகள்