சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படையில் பங்கேற்றிருந்த 62 உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கக் கோரிய மனுவுக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை யாருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படையினருக்கு, அரசு பதவி உயர்வு வழங்கியது. அதன்படி, உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பாபு உள்ளிட்ட 62 உதவி ஆய்வாளர்கள், தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், பணி மூப்பு அடிப்படையில் தங்களுக்கு ஆய்வாளராக பதவி உயர்வு வழங்காமல், 2008-ம் ஆண்டு உதவி ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். இந்தப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும். தங்கள் 62 பேருக்கும் பதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மனுவுக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், அதுவரை யாருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டாம் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினார்.