Skip to main content

வீரப்பன் வேட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு கோரிய வழக்கு! -தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 29/06/2020 | Edited on 30/06/2020

 

HIGHCOURT

 

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படையில் பங்கேற்றிருந்த 62 உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கக் கோரிய மனுவுக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் பதிலளிக்க,  தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை யாருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படையினருக்கு, அரசு பதவி உயர்வு வழங்கியது. அதன்படி, உதவி ஆய்வாளராகப்  பணியாற்றி வரும் பாபு உள்ளிட்ட 62 உதவி ஆய்வாளர்கள், தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், பணி மூப்பு அடிப்படையில் தங்களுக்கு ஆய்வாளராக பதவி உயர்வு வழங்காமல், 2008-ம் ஆண்டு உதவி ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். இந்தப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும். தங்கள் 62 பேருக்கும் பதவிகள் வழங்க  உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மனுவுக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், அதுவரை யாருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டாம் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் அறிவிப்பு!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Veerappan daughter Vidya Rani announced as the candidate of Naam Tamilar Party!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற வேட்பளராக வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் இருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.