Skip to main content

“முறைகேடுகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாய கடன் கிடையாது” - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

High Court orders, No agricultural loans for Improper activities involving farmers

 

பரம்பிக்குளம்-ஆழியாறு இணைப்புத்திட்ட கால்வாயிலிருந்து சில தனிநபர்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி அத்திட்டத்தின் முன்னாள் தலைவரான கே.பரமசிவம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கால்வாய் மூலமாக பெறப்படும் தண்ணீர் அனைவருக்கும் சமமாக பங்கிட வேண்டும். சிலர் அரசிடமிருந்து அனுமதி பெற்று தண்ணீர் எடுத்தாலும் சட்டவிரோதமாக அதிக தண்ணீரை உறிஞ்சுவதால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

 

எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, “நீர்வள ஆதார அமைப்பின் தலைமை என்ஜினீயர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்ய போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து சிலர் குழாய்களை அகற்றி விடுகின்றனர். ஆய்வு முடித்து சென்றபிறகு, மீண்டும் தண்ணீர் திருடுகின்றனர்.

 

High Court orders, No agricultural loans for Improper activities involving farmers

 

இதுபோன்ற இடங்களில் மின்இணைப்பைத் துண்டிக்க மின்வாரியத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும் பொதுவான தண்ணீரை சட்டவிரோதமாக எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக தண்ணீர் எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் எடுப்பதற்கு உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வறட்சி காலங்களில் தண்ணீருக்காக மக்கள் எவ்வளவு அவதிப்படுகின்றனர் என்பதை சொல்லத் தேவையில்லை.

 

அவ்வளவு மதிப்பு மிக்க தண்ணீரை முறையாக பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் 30 ஆண்டுகளாக தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளதால், தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நீர் வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் அங்கு சில தனிநபர்களுக்கு தண்ணீர் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை மறுஆய்வு செய்ய வேண்டும். தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். மின்இணைப்பை துண்டிக்க வேண்டும்.

 

குறிப்பாக தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கும் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக்கூடாது. மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி அவர்களை கருப்பு பட்டியிலில் சேர்க்க வேண்டும்.

 

தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்களை துல்லியமாக கண்டுபிடிக்க ‘டிரோன் கேமராக்களை’ பயன்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும் இந்த உத்தரவை கோவை, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், இதற்காக விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.