Skip to main content

தொல்நடைக் குழு ஒருங்கிணைத்த தொல்நடை பயணம்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

 

தொல்நடைக் குழு ஒருங்கிணைப்பில் தொல்நடை பயணமாக தொல்லியல் களங்களை பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிட்டனர்.

 

சிவகங்கை தொல்நடைக் குழு, தொன்மை மரபு சார்ந்த செய்திகளைப் புதிதாகக் கண்டுபிடித்து அடையாளப்படுத்துவதும், ஆவணப்படுத்துவதும் மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடையே தொன்மை மரபுகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தொல்லியல் இடங்களைப் பார்வையிட தொல்நடை பயணத்தை அவ்வப்போது தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு முன்பாக இரண்டு தொல்நடை பயணத்தை நடத்தி முடித்திருந்த நிலையில் நேற்று மூன்றாவது களப்பயணம் நடைபெற்றது.

 

சிவகங்கை தொல்நடைக்குழு ஒருங்கிணைப்பில் தொல்நடை பயணம் நடைபெற்றது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பயணத்தில் முதல் நிகழ்வாகச் சென்று பார்வையிடக்கூடிய இடங்களைக் கையேடாகத் தயாரிக்கப்பட்டது. அந்த கையேட்டினை சிவகங்கை தொல்நடைக் குழு தலைவர் நா. சுந்தரராஜன் வெளியிட ஓய்வுபெற்ற தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பா.இளங்கோ பெற்றுக் கொண்டார். 

 

தொடர்ந்து படமாத்தூரை அடுத்த சித்தாலங்குடி மகாராஜா கோவில், மதுரை மாவட்டம் வரிச்சூர் குன்னத்தூர் குடவரைகள், சமணப்படுக்கைகள், தமிழி எழுத்து ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் கீழடி அருங்காட்சியகம், கீழடியில் திறந்த நிலையில் உள்ள ஏழாம் கட்ட அகழாய்வுத்தளம், தூதை வட்டெழுத்து கல்வெட்டுடைய நடுகல், உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டு கட்டடக்கலையில் கட்டப்பட்ட இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் கோவில் ஆகியவற்றை பார்வையிட்டனர். அதேசமயத்தில் அதன் தொன்மையும் மரபும் சார்ந்த செய்தியை அறிந்து அதை பாதுகாக்க விழிப்புணர்வு பெற்றனர். 

 

தொல்லியல் களத்தில் அவ்விடத்திற்கான சிறப்புகளை சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா விளக்கிக் கூறினார். சிவகங்கை தொல்நடைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், காளையார்கோவில் நாட்டிய பள்ளி, திருக்கானப் பேருரார் கலைக்களஞ்சிய மாணவர்கள் எனப் பல நிலைகளிலும் ஆர்வம் உடையவர்கள் தொல்நடை பயணத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் நரசிம்மன், பொருளாளர் பிரபாகரன், துணைத் தலைவர் முனீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.