Skip to main content

விழுப்புரத்தில் ஏமாற்றிய கும்பல்.. ஆந்திராவில் சிக்கியது..! 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

Group of person cheated with color Xerox Rupees

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள செண்டூர் எனும் ஊர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி வசந்தா (54). இவர், ஆடுகளை வளர்த்து, பராமரித்து, அதை விற்றுவரும் பணத்தில் தனது குடும்பத்தை நடத்திவருகிறார். கடந்த மாதம் 22ஆம் தேதி, இவர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள வயல்வெளி பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். 

 

அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஒரு பெண் உட்பட 3 பேர் கொண்ட ஒரு கும்பல், வசந்தாவிடம் ஆடுகளை விலைக்குத் தருமாறு கேட்டுள்ளனர். வசந்தா முதலில் விலைக்கு கொடுக்க மறுத்துள்ளார். ஆனால், ஆட்டோவில் வந்தவர்கள் அதிகப் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து நான்கு சிறிய ஆடுகள், ஒரு பெரிய ஆடு என மொத்தம் ஐந்து ஆடுகளுக்கும் சேர்த்து 26 ஆயிரம் ரூபாய் விலை பேசி முடித்துள்ளனர். வசந்தாவும் அந்த விலைக்கு ஆடுகளைக் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர்கள் ரூ. 2,000 நோட்டுகளாக 26,000 ரூபாயை வசந்தாவிடம் கொடுத்துவிட்டு ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். 

 

அன்று மாலை வீட்டிற்குச் சென்ற வசந்தா, ஆடுகளை விற்று 26 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு வந்துள்ளதாக கூறி, அந்தப் பணத்தை தனது மகளிடம் கொடுத்து, சரியாக உள்ளதா என சரிபார்க்கச் சொல்லியுள்ளார். அப்போது அவரது மகள் அந்த 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். அந்தப் பணத்திலிருந்து ஒரு 2,000 ரூபாய் நோட்டைக் கொண்டு அந்த ஊரில் உள்ள ஒரு கோழிக் கடையில் கொடுத்து கோழி இறைச்சி கேட்டுள்ளார். கடைக்காரர் அந்த நோட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, இது கலர் ஜெராக்ஸ் நோட்டு என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வசந்தா, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். 

 

உடனடியாக மயிலம் காவல் நிலையத்திற்குச் சென்று அந்த ஆட்டு வியாபாரிகள் கொடுத்த பணத்தைக் காட்டி புகார் அளித்துள்ளார். இதையடுத்து மயிலம் போலீசார், வசந்தா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து, ஆடு வியாபாரத்தில் மோசடி செய்தவர்களைத் தேடிவந்தனர். இந்த நிலையில், ஆடு வாங்குவது போல் சென்ற அந்தக் கும்பல் ஆந்திரா பகுதிக்குச் சென்று மோசடியில் ஈடுபட்டு, அங்குள்ள போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இந்தத் தகவல் மயிலம் போலீசாருக்குத் தெரியவந்தது. உடனடியாக இங்கிருந்து ஆந்திர மாநிலம் சென்று அங்கு போலீசாரிடம் பிடிபட்ட அந்தக் கும்பலை அழைத்துவந்து விசாரித்தனர். 

 

அந்த விசாரணையில் அவர்கள்தான் செண்டூர் வசந்தாவிடம் 26,000 ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளைக் கொடுத்து ஆடு வாங்கிய மோசடி வியாபாரிகள் என்பது தெரியவந்தது. 

 

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷேக் அயுப் (32), அவரது மனைவி பர்கத்பி (25), சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஷரிப் (50) ஆகிய மூவரும் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கலர் ஜெராக்ஸ் பணத்தைக் கொடுத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்த மயிலம் போலீசார், மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.