Skip to main content

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க.. இல்லைன்னா...” - தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Government officials asking bribe from workers in Dharapuram

 

‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க.. இல்லனா உங்களுக்கு தான் கஷ்டம் ஆயிடும்.. புரிஞ்சதா’ என தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது அலங்கியம் கிராமம். இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட ஏழு இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, தற்போது நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையில், அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்குமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், கடந்த 20 நாட்களாக அரசு அதிகாரிகளுக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 

அப்போது, விவசாயிகளிடம் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என உடன்பாடு ஏற்பட்ட நிலையில், நெல் கொள்முதல்கள் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் லஞ்சம் தர மறுத்ததால், தொழிலாளர்களிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதே சமயம், அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் உள்ளூர் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இத்தகைய சம்பவங்களால் கடந்த 2, 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதால் நெல்மணிகள் குவியல் குவியலாகத் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் செல்போன் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.