Skip to main content

“தேர்வுக்கு வந்தா மட்டும்போதும்; அரசு வேலை கன்ஃபார்ம்..” லட்சங்களை சுருட்டிய நபர் கைது!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

Government job Fraudster arrested
தேவநாதன்

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்துள்ள செவலபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(30). இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்த சிங்கனூரைச் சேர்ந்த தேவநாதன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு நண்பர்களாகப் பழகி உள்ளனர். 

 

அப்போது தேவநாதன், ராஜசேகரிடம் “உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு டி.என்.பி.சி. குரூப் தேர்வுகளில் கலந்து கொண்டால் போதும்; அவர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாங்கித் தருகிறேன்”  என்று கூறியுள்ளார். அதனை நம்பி ராஜசேகர் மற்றும் அவரது உறவினர் ராஜேஷ் ஆகியோர் தேவநாதனிடம் தலா ஏழு லட்ச ரூபாய் வசூல் கொடுத்துள்ளனர். 

 

அதேபோன்று மேல்மலையனூரைச் சேர்ந்த முருகன், ஆனந்தன், அருள்மொழி, தேவன், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலன், மணி, பூங்காவனம் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களிடம் 5 லட்சம், 3 லட்சம் என மொத்தம் 42 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேவநாதனும் அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த நாகராஜ், பாபு, தினேஷ், சரவணன் ஆகியோர் பணத்தைப் பெற்று உள்ளனர். 

 

இவர்கள் கூறியபடி வேலை எதையும் வாங்கித் தராமல், பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்து வந்துள்ளனர். அதனால், பணத்தை பறி கொடுத்தவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்போது, தேவநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

 

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவள்ளி என்பவருக்கும், எதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணிமேகலை, புஷ்பவள்ளியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு வருஷம் கழித்து இரண்டு லட்ச ரூபாயாக தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய புஷ்பவள்ளி, தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 12 லட்ச ரூபாயை ஒரு ஆண்டில் 24 லட்சமாக இரட்டிப்பாக தருமாறு கொடுத்துள்ளார். அதேபோன்று பாசி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் என பலரிடத்திலிருந்தும் பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார் மணிமேகலை. ஆனால், கூறியபடி ஒரு ஆண்டு கழித்து வாங்கிய பணத்தை இரட்டிப்பாக்கி தரவும் இல்லை, கொடுத்த அசல்பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கிறார்.

 

Government job Fraudster arrested
வெங்கடேசன்

 

இதுகுறித்து புஷ்பவள்ளி, அவலூர்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். போலீசார் முன்னிலையில் 12 லட்ச ரூபாயை குறிப்பிட்ட நாட்களில் தருவதாக வெங்கடேசன் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் எழுதிக் கொடுத்துள்ளனர். அதன்படியும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து மணிமேகலை அவரது கணவர் வெங்கடேசன் ஆகிய இருவர் மீதும் புஷ்பவள்ளி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர். அவரது மனைவி புஷ்பவள்ளி தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.