Skip to main content

“பள்ளி தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nn

 

திண்டுக்கல் மாநகரில் உள்ள பழனி ரோட்டில் இருக்கும் பாடநூல் கழக கிடங்கில் பாடநூல் புத்தகங்கள் பள்ளிக்கு அனுப்பும் பணியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

அதன் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ''தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். பாடநூல்களைப் பொறுத்தவரையில் தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைவருக்கும் அரசின் இலவசப் புத்தகங்கள் கிடைக்கும்.

 

தேனி மாவட்டத்தில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அதற்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.

 

தொடர்ந்து பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், ''தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய மூன்று கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. மேலும் இலவச பாடப்புத்தகங்களுடன் 11 கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைப்பார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் +2 வரை அரசுப் பள்ளிகள் படித்தால் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

 

மேலும் கல்லூரிகள் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திராவிட மொழிக் குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாறு பாடத்தைச் சேர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்று அதற்கான உத்தரவை வழங்குவார்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
cm stalin announced that relief of Rs.6 thousand will be given to the affected people

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகையாக ஏற்கனவே வழங்கி வந்த ரூ. 5 ஆயிரத்திலிருந்து தற்போது ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்; நெற்பயிர் பாதிப்புகளுக்கான இழப்பீடு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

“புயல் எச்சரிக்கை கொடுத்தும் அரசு மெத்தனமாக இருந்திருக்கிறது” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
edappadi Palaniswami accused Tamil Nadu government of flooding in Chennai

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திருவெற்றியூரில் வெள்ள நிவாரண பணிகளை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஊழலில்தான் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றில்தால் தமிழ்நாடு முதன்மை மாநிலம். திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் கோடி திட்டங்களில் பெரும் ஊழல் நடந்திருப்பது. 

2015 ஆம் ஆண்டு கன மழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சாரம் உயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை வரும்போது சென்னை மாநகர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது என்று எல்லாருக்கும் தெரியும்; அதனால் பால் தட்டுப்பாடு வரும் என்று அரசுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது மழைக்கு முன்பே நியாய விலை கடைகளின் மூலம் பால் பவுடரை மக்களுக்கு விநியோகம் செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?  புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.