Skip to main content

விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை! அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்!

Published on 25/12/2022 | Edited on 25/12/2022

 

Government compensation for the families of 8 people who passed away in the accident!

 

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் ஒரு காரில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து விட்டு நேற்று முன்தினம் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஐயப்ப பக்தர்கள் வந்த கார் குமுளி மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது எஸ் வளைவு தாண்டி பென்ஸ்டாக் குழாய் அருகே வரும்போது நிலைத் தடுமாறி 40 அடி பள்ளத்தில் இருந்த பென்ஸ்டாப் குழாயில் தண்ணீர் வரும் மெகா சைஸ் பைப் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் காரில் வந்த சிவகுமார், வினோத், நாகராஜ், கோபாலகிருஷ்ணன், கன்னிச்சாமி, கலைச்செல்வன், தேவதாஸ், முனியாண்டி ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜா, ஹரிஹரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களையும் மேலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களையும் மீட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தெரியவர, அவர் உடனே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் ஆட்சியர் முரளிதரன் ஆகியோரை நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும்படியும், தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல், அமைச்சர் ஐ.பெரியசாமி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும், காயம் அடைந்தவர்களையும் பார்த்து நலம் விசாரித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி வழங்குவார் என்று கூறியிருந்தார். 

 

அதன்படி இன்று, முதல்வர் உத்தரவுப்படி உயிரிழந்த 8 பேரின் வீடுகளுக்கும் நேரில் சென்று அமைச்சர் ஐ. பெரியசாமி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார். குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா இரண்டு லட்ச ரூபாயும் காயமடைந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் என நிவாரணத் தொகையாக வழங்கினார். இதில் தெற்கு மாவட்டச் செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான மகாராஜன், தேனி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் ஒன்றிய செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சரவணகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உட்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.