Skip to main content

அரசுப் பேருந்து நடத்துநர் மோசடி! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

Government bus conductor fraud!

 

கடலூர் மாவட்டம், வடலூர், ஊமங்கலம் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மழவேந்தி, உத்திராபதி ஆகியோர் பேருந்தை வழிமறித்து ஏறினார்கள். அப்போது அவர்கள் பயணிகளின் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்து சீரியல் எண் சரி பார்த்தபோது அந்த டிக்கெட் பழைய டிக்கெட் எனத் தெரியவந்தது.

 

பின்னர் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளிடமும் டிக்கெட்டை பரிசோதித்துள்ளனர். இதில் பெரும்பாலான பயணிகளிடம் இருந்த டிக்கெட் ஏற்கனவே பயணம் செய்தவர்களின் டிக்கெட் என்றும் இது பழைய டிக்கெட் என உறுதியானது. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பின்னர் பேருந்து நடத்துநரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறினார். அதன் காரணமாக அவரது பணப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த டிக்கெட் பழைய டிக்கெட் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில், சிதம்பரம் பேருந்து நிலையம் வந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சத்தியமூர்த்தி மற்றும் நடத்துநர் நேரு ஆகிய இருவரையும் சேலம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர்.

 

இவர்கள் நடத்திய விசாரணையில், நடத்துநர் பழைய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளனர். இந்த மோசடியில் ஓட்டுநர் சத்தியமூர்த்திக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தொடர்பு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்